CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Thursday 14 December 2017

Manam yennum mayakkannadi (Tamil Article No.8)

மனம் என்னும் மாயக்கண்ணாடி- 8

பார்கவி. பார்க்க மிக அமைதியாக இருந்தாள். இரண்டு கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள். அவளின் மவுனத்திற்கும் வார்த்தைக்கும் இடையில் குற்றவுணர்வு ஒளிந்திருந்தது. அது கணவன் அல்லாத வேறு ஆணோடு அவளுக்கு இருந்த உறவு சம்பந்தப்பட்டது அந்தக் குற்றவுணர்வு.
பார்கவிக்கும் அசோகனுக்கும் கல்யாணமானதிலிருந்தே அவர்களிடையில் சரியான இணக்கமில்லை. அதற்கு முக்கிய காரணம் அவனது குடிப்பழக்கம் தான். ஆரம்பத்தில் அவ்வப்போது குடிக்க ஆரம்பித்தவன் பின் அதிகமாக அதற்கு அடிமையானான். அது எங்கு எதிரொலித்தது என்றால் அவனது தாம்பத்ய வாழ்வில் எதிரொலித்தது. அவனால் அவளை திருப்திப்படுத்த இயலவில்லை. சில போதை பொருட்களையும் அசோகன் உட்கொள்வது உண்டு. குடியின் மிகக் கொடிய தாக்கம் இதுவாகவே பெரும்பாலும் இருக்கிறது. அவ்வளவாக உரையாடப்படாத பகுதியாகவும் உள்ளது.
பார்கவி அதை சமன்படுத்தும் முயற்சிகளை எடுப்பாள். அவளாகவே அவனுக்கு அழைப்பு விடுத்தும் அவனால் அவளை எந்தநிலையிலும் திருப்திப்படுத்த இயலவில்லை. அதை சமாளிக்கும் பொருட்டு அவன் அவளை அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி நடந்து கொள்வதுண்டு. அதனாலேயே தனக்குள்ளாகவே அவள் தனது பாலியல் வேட்கையை மறைத்து வைத்துக் கொண்டிருந்தாள். பதிமூன்று வருடங்கள். இடையில் ஒரு குழந்தையும் வேறு.
பின் மெல்ல மெல்ல அது எதிர் தெரு நபருடனான உறவாய் மாறிற்று. முதல் முறையாக அவளது பாலியியல் வறட்சியில் மழை பெய்தது. முதல் ஆறுமாதங்கள் அதை முழுமனதாக அனுபவித்தாள். ஆனால், அதற்குப் பிறகாக அவள் அதை குற்றமாகப் பார்க்க ஆரம்பித்தாள். அவ்வூரிலிருந்து வெளிவர வேண்டுமென விரும்பினாள். குற்றவுணர்வே அவளுக்கு மிக மோசமான மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் அலைப்பாய்கிறாள் பார்கவி.
பாலியியல் வேட்கை, அதில் இணைந்திருக்கும் குற்றவுணர்வு, அதை வேறு நபரிடம் தோன்றினால் ஏற்படும் கூடுதல் குற்றவுணர்வு எல்லாமே சமூகம் நமக்கு முன் ஏற்படுத்தியிருக்கும் ஏமாற்று வேலை தான். பல பெண்களால் தங்கள் பாலியியல் வேட்கையையோ பாலியியல் தேடலையோ இச்சமூகத்தில் வெளிப்படுத்தக் கூட முடியாது. கற்பு என்பதே அந்த ஏமாற்று வார்த்தையாக இருக்கிறது.

பார்கவி தயங்கி சொன்ன விஷயம் இதுதான். என்னுடைய பாலியல் தேவைகள் என் வாழ்வில் பூர்த்தி ஆனதேயில்லை. நம் கலாசாரத்தில் மிகுந்த பரப்பரப்பாக பேசப்படும் விஷயம் கற்பு. குறிப்பாக, பெண்களைப் பற்றி பேசும் போது இவ்விஷயத்தை மிக கவனமாக கையிலெடுப்பார்கள். கன்னித்தன்மை என்னும் வார்த்தை கற்பு அரசியலில் மிக நுட்பமான கூறுகள் கொண்ட ஒரு வார்த்தையாகும். கன்னித்திரை என்பது அவர்கள் கோட்பாடுகளில் ஒரு பெண்ணிற்கு கணவனால் மட்டுமே கத்தரிக்க வேண்டிய கத்திரிக்கோல்.
வாழ்வின் பெரும் சவால்களில் ஆனால் கன்னித் திரை என கூறப்படுவது பெண் சைக்கிள் ஓட்டினால் கூட கிழிந்து தான் போகும். என் தோழியின் முதலிரவில் உடலுறவுக்குப் பின் அவள் கணவன் போர்வையில் ரத்தம் தேடிய கதையை அவள் இன்னமும் உரக்க சொல்லி சிரிப்பாள். பெண்களை இதை முன்வைத்தே கற்புக்கரசி என்றும் வீட்டின் கன்னி தெய்வம் என்றெல்லாம் அடையாளப்படுத்தி கொண்டாடுகிறார்கள். பூஜை கூட செய்கிறார்கள். பல சாமியார்கள் பரிகாரமாய் கன்னித் தெய்வத்திற்கு படையல் வைங்க என்று சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன்.
மருத்துவரீதியாகவே ஒரு பெண்ணை ஒரு ஆண் உடல்ரீதியாக அணுகுவது மற்றும் திருப்தியளிப்பது என்பது மிக சிரமமான விஷயம். ஒரு ஆணால் மூன்று நிமிடங்களுள் உச்சம் அடைய முடியும். ஆனால், ஒரு பெண்ணுக்கு உச்சநிலையை எட்டுவதென்பதற்கு சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். இந்த ரீதியில் அணுகினோம் என்றால் பெரும்பாலான ஆண்களால் பெண்களை திருப்திப்படுத்த முடியாது. அப்படி நேரும் போது பிற உறவுகளில் ஈடுபட நேர்கிறது. இதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருதரப்பிலும் நியாயங்களை வைக்கும் அளவிற்கே இவ்விஷயங்கள் குறித்த சமூக புரிதல் உள்ளது . இது துரதிஷ்டமே.
ஒரு ஆணால் இன்னொரு பெண்ணை வெகு சுலபமாக தன் வாழ்வில் சேர்த்துக் கொள்ள இயலும். ஆனால், ஒரு பெண்ணால் அது சுலபமாக இயலாது. அவளது தனிமையிலும் பெருமூச்சிலும் தான் அவளின் வெற்றிடங்கள் கரைந்து போகும். அந்நோன்யத்திற்கான பசி ( hunger for intimacy ) என்று அது அழைக்கப்படுகிறது. பைபிளில் பத்து கட்டளைகளில் பிறன் மனையை நினைக்காதே என்று இருக்கிறது. ஆனால், யதார்த்த வாழ்வில் அப்படியொரு சூழலை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
ஒரு பக்கம் அப்படி முதன்மை உறவில் திருப்தியடையாத ஆணோ பெண்ணோ வேறு உறவுகளில் ஈடுபடுவது இயற்கையே. ஆனால், சமூக நிர்பந்தங்களினால் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலைக்குக் கூட ஒழுக்கவரையுறுகளால் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

பார்கவிக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்த சிகிச்சையே அவளை குற்றவுணர்விலிருந்து மீட்பதே ஆகும். முக்கியமாக புராண கதைகளில் ஆண்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதை புரிய வைப்பதிலிருந்து ஆரம்பிக்கும் உரையாடல் அது. உடல் என்பது அருவெருப்பானது என்ற சமூகத்தின் பெரும் தீ ர்மானத்தை தொடர் உரையாடல்கள் மூலமே தீர்க்க முடியும். அல்லது தீர்வை நோக்கி நகர முடியும்.
விவாகரத்து செய்து கூட தனக்கு வேண்டிய வாழ்வை நம்மில் பலர் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், குழந்தைகள் பாதிக்கப்படுமே என்பதால் அதை செய்ய மறுக்கும் பலர் தங்கள் மன தாபங்களை, அந்நோன்யத்தை ரகசிய உறவுகளின் மூலம் தீர்த்துக் கொள்கின்றனர்.
சரி தவறு என்னும் துலாபாரம் அற்றதாகவே உறவு சிக்கல்கள் உள்ளன. பார்கவியைப் போல இன்றுபல ஆண்கள் பல பெண்கள் இருக்கின்றனர். அவர்களை பெரும் குற்றம் இழைத்ததாக இந்த சமூகம் பார்ப்பது தான் இந்த சமூகத்தின் பிழை. உடல் குறித்த புரிதல் என்பது ஏற்படும் வரை இந்த சிக்கல்களோடே தான் மனித இனம் நகரும். அச்சிக்கலை மனச்சிக்கலாக்கி அழுத்தங்கள் கொடுக்கும்.

Dr. Sunil Kumar                                       Dr. jayasudha kamaraj
Clinical Psychologist                                Counseling Psychologist
Founder - Mind Zone                                co-founder, Mind Zone

Manam Yennum mayakkannadi (Tamil Article No. 10)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 10

முருகனை மனநல பாதுகாப்பகத்துக்கு அழைத்து வந்ததன் நோக்கமே அவன் வெளியே இருந்தால் யாராவது அவனைக் கொலை செய்துவிடுவார்கள் என்பதே ஆகும். எந்தவிதமான கொலை வழக்கும் அவன்மீது இல்லை. ஆனால், அவனுக்குக் கஞ்சா மற்றும் குடிப் பழக்கங்கள் இருந்தன.
முருகனின் மேல் நாற்பத்தைந்து வழக்குகள் உள்ளன. இதில் செயின் பறிப்பு வழக்குகள் அதிகம். இத்தகைய குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் அவன் நண்பர்களும் நண்பர்களோடான பழக்கமும்தான். முருகனின் அப்பா ஒரு கவுன்சிலர். அம்மா வேலைக்குப் போகவில்லை. ஒரே தங்கை. நண்பர்களோடான பழக்கம் கஞ்சா பழக்கத்துக்கும் குடிப்பழக்கத்துக்கும் ஆளாகிறான். சிறு வயதிலிருந்தே யார் பேச்சையும் கேட்காமல் வளர்கிறான்.
முருகன் யார் என்று யோசித்தால் அது ஹாசினியையும் தன் சொந்த அம்மாவையும் கொலை செய்த தஸ்வந்த் போன்ற ஒருவன்தான். இவ்வகையான மனநிலைக்குப் பெயர், சமூக விரோத எதிர் குணாதிசயம். இதை வலியுறுத்த பெரும் ஆராய்ச்சிகள் நடைப்பெறாத போதிலே ஒரு குற்றவாளியின் மூளையைப் பிரேத பரிசோதனை செய்து பார்த்தபோது அவனது மூளை மற்ற சாதாரண மனிதர்களின் மூளையைக் காட்டிலும் வித்தியாசப்படுவதை மருத்துவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதிலிருந்தேதான் குற்றவாளிகள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா என்ற பட்டிமன்றமே உருவானது.
அதன் பிறகுதான் குற்றம் என்பதே மரபணுக்களால் ஏற்படும் பாதிப்பு என்னும் வாதம் உருவாயிற்று. அதாவது ஒரு குற்றவாளியின் மகன் குற்றவாளியாகவே இருப்பான், ஒரு வாத்தியாரின் மகன் வாத்தியாராகவே இருப்பான் என்னும் நம்பிக்கை சார்ந்த புரிதல் பேசப்பட்டது. இது எதுவுமே தீர்மானமான ஒரு முடிவைத் தரவில்லை என்பதே உண்மை. ஒரு வாத்தியாரின் குழந்தை குற்றவாளியாகச் சமூகத்தின் முன் நின்ற போதான நொடியில் இந்தத் தீர்மானமின்மை கிளைவிட்டது.

இப்படி மூளை நோயியல் அல்லது மரபணுவால் ஏற்படும் பாதிப்புகள் மருத்துவ ரீதியாக ஒரு செயற்பாட்டு காரணத்தைக் கொடுப்பதால் பொதுவான ஒரு தீர்மானமே கிட்டியதால் மூளையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் நடந்தன. அதில் மூளையிலிருக்கும் ஒரு பகுதி நம் மனத்தூண்டுதலைக் கையாள்கிறது என்பது குறிக்கப்பட்டு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சமூகக் குடும்ப மன சூழல் காரணமாக இந்த தூண்டப்படும் புள்ளி வேறுபடுவதாகச் சொன்னார்கள். ஒரு கேள்வியை முடிக்கும் முன்பே பதில் சொல்லும் செய்கைகூட இத்தகைய தூண்டுதலில் இருந்து கிளர்ந்தோடுவதுதான். இதுபோன்ற தூண்டுதல்கள் மிதமிஞ்சிப் போகும்போது அது சமூக விரோத எதிர் குணாதிசயம்.
முருகனைப் போலவே சிறுவயதிலிருந்தே யார் சொல்வதையும் எதையும் கேட்க மறுக்கும் தூண்டுதல் மனோபாவம்தான் பிற்காலத்தில் இந்தச் சமூக விரோத குணாதிசயத்தை அதிகரிக்க வைக்கிறது என்பதே அடிப்படையான புரிதலாகவும் தீர்மானமாகவும் கொள்ளப்பட்டது
இதன் நீட்சியாக ஏழ்மையில் இருப்பவர்கள் குற்றவாளியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. வீடற்றவர்கள், சிறுவயதில் வன்முறையைப் பார்த்தவர்கள், சிறு வயதில் உடல் வன்முறையை அனுபவித்தவர்களில் பெரும்பாலானோர் இத்தகைய உளவியல் ரீதியிலான தூண்டுதலுக்கு உள்ளாவதுண்டு. அதுவே சமூக விரோத குணாதிசயத்தைத் தூண்டுகிறது. ஏன் வன்முறை செலுத்தப்பட்டவர் வன்முறையாளராக ஆகிறார் என்றால் அதற்கான காரணம் உடல் அதிகாரத்தால் கிடைக்கும் சக்தியை எதிர்மறையாக அனுபவித்திருக்கிறார் என்பதால் மட்டுமல்ல. இந்தச் சமூகத்தையே அவர் பழி தீர்த்துக்கொள்ளும் செயலாக நினைக்கிறார் என்பதே உண்மை.

எப்போது தனக்கு அங்கு ஒரு பாதுகாப்பு ,அங்கீகாரம் இல்லை என்று உணர்கிறார்களோ, அப்போது அவர்கள் யார் மீது அதிகாரத்தை, வன்முறையை செலுத்துகிறார்களோ அவர்கள் சமூகமாகக் கண்களுக்குப் புலப்படுகிறார்கள். இதுதான் ஒரு பொத்தாம் பொதுவான தீர்மானங்களை இயற்றுகிறது. இஸ்லாமியர்கள் மீதான சமூக விரோத கண்ணோட்டம் இங்கிருந்து கிளை விடுவதுதான். இப்படி மன அரசியலின் பின்புலத்தில் உலகலாளவிய அளவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இனத்தை ஒடுக்கப்படும் முயற்சிகள் நிகழ்கிறது.
ஒடுக்கப்பட்டோர் குற்றவாளியாக இருப்பார்கள் என்னும் நிலைப்பாடு எப்படி உண்மையாக இருக்க முடியும். ராயபுரத்தில் பட்டாக்கத்தி எடுத்து வெட்டுபவனும் மயிலாப்பூரில் கம்ப்யூட்டர் ஹேக் செய்பவனும் சம பங்கு குற்றவாளிதான்.
முருகனைப் போல் இவ்வகைக் குற்றவாளிகளின் சமூக விரோதத்தன்மை சிறுவயதிலிருந்தே சில சில அறிகுறிகளாகத் தெரியும். பின் பதின்ம வயதில் பள்ளிக்குப் போகாமல் இருப்பது, சினிமாவுக்குப் போவது, சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுதன் மூலம் இந்த குணாதிசயம் வேர் ஊன்றும். சிறு வயதில் இதை நடத்தை சீர்குலைவு என்று சொல்வோம். இது வளர வளர சமூக விரோதத் தன்மையாக மாறுகிறது. ஒரு குழந்தை எதிர்வினையாக செயல்பட்டால் அதை முதலிலேயே மனநல ஆலோசகர்களிடம் கூட்டி வந்திருக்க வேண்டும். அதற்குச் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இந்த மலை விழுங்கும் குணாதிசயத்துக்கு இரையாகிவிட வேண்டியது தான்.
பச்சாதாபம் அவர்களுக்குச் சுத்தமாக இருக்காது. அதேநேரம் தன்னிச்சையாய் தூண்டப்பட்டு சிறிதும் யோசிக்காமல் காரியங்கள் செய்வார்கள். முருகனும் அப்படியே போதைக்காகவும் ஜாலியான வாழ்வு என்று அவன் நினைத்திருக்கும் வாழ்வுக்காகவும் பின் விளைவுகளைச் சற்றும் யோசிக்காமல் திருட ஆரம்பித்தான். எப்போதும் திமிராகவே நடந்து கொள்வான். எந்தச் சட்ட திட்டமும் அவனுக்கோ அவன் வாழ்வுக்கோ இல்லை. யாருக்காகவும் மனம் இரங்கும் தன்மையிராது. பணத்துக்காக மட்டும் கேட்பது போல நடித்துவிட்டு பின் மனம் மாறுபவர்கள். எல்லாமே உடனே நிகழணும். ஒரே பாட்டில் அம்பானி ஆகணும் கதையாக தான் முருகனுக்கு இருந்திருக்கிறது.
நம் சமூகத்தின் அவலமே இப்படியான தனிமனித மன குணாதிசயங்களை அவனிருக்கும் இடம் வைத்தோ, சாதி, மதம் வைத்தோ பொதுப்படையாக பேசுவதன் மூலம் அந்த இடம், சாதி, மதம் குறித்த அடையாளம் ஒன்றை முத்திரையிடுவதுதான். அது போலவே இவர்களின் இத்தன்மையைச் சுய அரசியல் லாபங்களுக்காக குடும்பங்களிலும் அதேநேரம் சமூகத்திலும் பயன்படுத்தி அதிகாரங்களைத் தனக்குரியதாக்கிவிட்டு பின் இவர்களை மட்டும் சமூக விரோதிகளாக அடையாளம்காட்டி இவர்களை அழிப்பதும் சமூகம்தான். ஆக, இவர்களை உருவாக்குவதும் அழிப்பதும் சமூகம்தான். இந்தச் சமூக உளவியல் சிக்கலை ஆராய்ந்தோமானால் நமக்குப் புரிபடும் முக்கியமான விஷயம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஒடுக்குமுறைகளும் பொருளாதார ஏற்றதாழ்வுகளுமேதான்.
எங்கு, எப்போது நீதி தன் கடமையைச் செய்யவில்லையோ அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து இப்படி ஒரு சமூக விரோத எதிர் பிரதிநிதித்துவம் பிறக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, முருகன் என்பவன் முருகன் மட்டுமல்ல; முருகனுக்கான சிகிச்சை என்பது முருகனுக்கானது மட்டுமல்ல; இந்த சமூகத்துக்கானதாக இருக்க வேண்டாம். ஒட்டுமொத்த சமூகத்தின் உலவியல் தன்னிச்சை செயல்பாடுகளிலும் ஒற்றை மனிதனை சிகிச்சைக்கு உட்படுத்துவதால் உடனடியாக மாறிவிடாது. இது ஒரு சமூக மாற்றத்தின் பிம்பமாக மட்டுமே பிரதிபலிக்க வேண்டியது.

நம் கல்வி திட்டங்களில் மாற்றங்கள், காவல் துறையில், பள்ளி ஆசிரியர்களில் உணர்திறனை கூராக்குவதன் மூலமே இது சாத்தியப்படும். நீதித் துறையும் இதில் உள்ளடக்கமே. சிறை என்பதன் அர்த்தம் குற்றவாளி மனம் மாறுவதுதான். ஆனால், அந்த மாற்றம் நிகழ்வதற்கான மாற்றம் எதுவுமே நிகழ்த்தப்படவில்லை. சிறையும் மனநல காப்பகங்களும் அதனால் ஒன்றாகவே இருக்கிறது. சமூகத்தால் சமாளிக்க இயலாதவர்களின் கூடாரமாகவே இவை அமைந்திருக்கிறது. சிக்கல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதைக் கண்டறியாமலே ஓர் உதிரி சமூகத்தை உருவாக்குவதன் மூலம் மேலும் சிக்கலைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.
முருகனைப் போல சமூக விரோத குணாதிசயம் கொண்ட மனிதர்களால்தான் பெண்களுக்கு உடல் வன்முறையும் நிகழ்கிறது. அவர்களின் காம உணர்வு இடம், பொருள், பின் விளைவு எதையுமே பார்ப்பதில்லை.
முருகனை மொத்தம் ஆறு பள்ளிகளில் வெவ்வேறு பிரச்னைகளால் மாற்றியிருப்பதாகச் சொல்கிறார் அவர் அப்பா. அப்போதே முருகனுக்கு மனநல உதவி தேவைப்பட்டிருக்கிறது, அத்தகைய சிறு வயது கண்டுணர்தலும் ஆலோசனையும் முருகனை மீட்டிருக்கக் கூடும். முருகன் அதன்பின் வீட்டுக்கு வராமலும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமலும் நாள்கள் நகர்ந்தன. அவனை வேறு சிலர் கொலை செய்ய முயற்சிக்கும்போதே அவன் குடும்பத்துக்கு நிலைமையின் தீவிரம் புரிகிறது.
ஹாசினியைக் கொன்றவனின் நிலமையும் இதுதான். ஹாசினியைக் கொன்றபோது அவனை ஜாமீனில் எடுக்க வீட்டையெல்லாம் விற்ற அவன் அம்மா அப்பாவையே கொலை செய்ய எண்ணும் அவனது சமூக விரோத மனம் தன்னிச்சை செயல்பாடுகளால் உந்தித் தள்ளப்பட்டதே. அதற்கு நன்றி பாராட்டுதலோ, மனித மாண்புகளோ கிடையாது. இக்குணாதிசயமே சமூக அநீதிகளுக்குட்படும்போது சமூக விரோத செயல்களாக உருவெடுக்கிறது.
ஆக, முருகனை சிகிச்சையின்பேரில் அவனது தன்னிச்சையான உணர்வை கோர்வைப்படுத்த முயல்வதே அவனை மீட்கும் முயற்சி. ஆனால், அது நூறு சதவிகித வெற்றியாகுமா என்பதை உறுதியளிக்க முடியாது. தன்னிச்சை கட்டுப்பாட்டுக்கான பயிற்சிகள் கொடுக்கப்படுவதன் மூலம் மாற்றத்துக்கான முயற்சியை மேற்கொள்ளலாம். சமூகத்தின் நேர்மையற்ற ஏற்றதாழ்வுகளை சரி செய்தாலன்றி நம்மில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான முருகன்கள் மனநலத்துடன் இருப்பது சிரமமே.

Dr. Sunil Kumar                                                  Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                           Counseling Psychologist
Founder - Mind Zone                                           Co-founder, Mind Zone

Wednesday 6 December 2017

Manam Yennum Mayakkannai - Part - 9 (Article in Tamil)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 9

விஸ்வநாதனைச் சந்தித்த முதல் நொடி அவரின் கூச்ச சுவாபம்தான் என் கண்ணிலும் புத்தியிலும் உடனடியாக அவரைப் பற்றி பதிந்த அபிப்பிராயங்கள். விஸ்வம் ஒரு கோயில் பூசாரி. மிகவும் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து குலப்பெருமையைக் காப்பதே வாழ்க்கை என்று நினைக்கும் ஒருவராகவே விஸ்வம் இருந்திருக்கிறார். பதின்ம வயது சுய கட்டுப்பாட்டு கோட்பாடுகளில் ஒன்றாக அவருக்குப் பெண்கள் மீது எந்தவித பாலியல் ஈடுபாடும் வந்துவிடக் கூடாது என்பது அதில் முக்கியமான ஒன்று.
அதன்படியே அவரது வாழ்க்கையும் நகர்ந்தது. பெண்பால் ஏற்படும் இயற்கையான ஈடுபாடு தவறு என்றே நினைக்கிறார். விரும்பியபடியே கோயில் பூசாரியாக ஆகிறார். அதன்பிறகு, வாழ்க்கை நன்றாக தான் போகிறது. வாழ்க்கையில் கச்சிதமான வழிநெறிகள் தவறாத மனிதராக (பர்ஃபெக்ஷ்னிஸ்டாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர். யார் மனதையும் எந்தக் காலகட்டத்திலும் காயப்படுத்தக் கூடாது. அதேபோல் எந்த பெண்ணையாவது பார்த்தது யாருக்காவது தெரிந்து விட்டால் அது தனக்கும் தன் குலத்துக்கும் அவமானம் என நினைத்தார்.
என்ன தான் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும் நம்மை ஆள செய்தாலும் மனம் என்பது தன் போக்கில் இயற்கை உந்துதலின் வழியே செல்லும். அந்த வயதிற்கு இயல்பாக இருக்கக் கூடிய இச்சைகளை மனதும் உடலும் நிராகரிக்காது. அப்படி நிராகரித்து விட்டதாக சொல்வது போலியானது. ஆனால், சமூகம் கட்டமைத்த போலியான கோட்பாடுகளாலும் உடல் என்பதை அசிங்கத்தின் தொடர்ச்சியாக பார்க்கும் மனநிலையின் நீட்சியாகவும் நம் போலிகளையே நிஜமென நம்புகிறோம். அப்படியான மனநிலைக்குத்தான் விஸ்வமும் தள்ளப்பட்டார்.

எப்போது இதுபோன்ற உணர்வுகளை அடக்கி வைத்தோ, மறுதலித்தோ வாழ்ந்தால் அது தன் இயற்கையான வழியை தானே கண்டடையும். இது தான் நியதி. இப்போது தான் விஸ்வத்துக்கு தன் நடவடிக்கை குறித்து நிறைய கேள்விகள் வந்தன. அடிக்கடி குளிக்க ஆரம்பித்தார். அவர் குளித்து கிளம்பி பாதி தூரம் கோயிலுக்குப் போகும் பாதையில் பின்பு திரும்ப வீட்டுக்கு வந்து மீண்டும் குளித்து கிளம்புவார். குளிப்பதும் நாம் ஒற்றை வார்த்தையில் சொல்வது போல சாதாரணக் குளியல் இல்லை. சோப்பைப் போட்டு தேய்த்து, பின் தேய்த்து தேய்த்து, தேய்த்தான குளியல். அவரது தோலே நிறம் மாறி போகும் அளவுக்கான குளியல் அது. அப்போது தான் தனக்கு மனநல ஆதரவு தேவை என்று கருதி சிகிச்சை எடுக்க முன்வருகிறார்.
மனநல மருத்துவர்களிடம் தன் நிலையை சொல்பவரால் எல்லாமே மனம்விட்டு சொல்ல முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அது குறித்த அவரது கோட்பாட்டு விழுமியங்கள் வேறாக இருந்தன. பேசப் பேசவே தன் மனதின் இடுக்குகளில் சிக்கிக்கிடந்த ரகசியத்தை பகிர்கிறார். அதன்படி அவருக்கு அம்பாளின் மேல் பெரும் பிரேமம் இருக்கிறது. அம்பாளுக்கு உடை மாற்றும்போதும் பூஜைக்கு தயார் செய்யும் போதும் இந்த நினைவு கசடாய் வந்து நிற்க அவரால் தான் கறைப்பட்டு விட்டோம் என்ற நினைவை தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதன் காரணமே அவர் அடிக்கடி குளிக்க ஆரம்பிப்பது. பூலோகப் பெண்களையே நினைத்து பார்க்கக் கூடாதென நினைக்கும் என்னை இப்படி அம்பாளையே தவறாய் நினைக்கும் அளவுக்குக் கொண்டு வந்தது என்ன? எது என்னை இந்த தீய எண்ணத்திலிருந்து மீட்கும்? எது என்னை புனிதப்படுத்தும் என்ற சுயபோராட்டத்தின் விடையே அந்த குளியல்.
நம் சமூகத்தில் பொதுவாகவே கச்சிதமாக வாழ்பவர்களாக இருப்பவர்கள் எல்லாமே அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். கச்சிதம் என்று ஒன்றும் இல்லை. அதை யார் நிர்ணயிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் கோட்பாடுகள் அமையும். அது சாதி, மதம் பிராந்தியம் சமபந்தமான நீட்சிகள் உடையது. அதன்படி வாழ்வதென்பது உலகப்பிராகரமாக முடியாத காரியம். அதனால் யதார்த்த வாழ்வில் முரண்பட்டு இக்கச்சிதங்கள் சிதையும்போது மனச்சிதைவும் அழுத்தங்களும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருகின்றன. மன அழுத்தம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனதையும் உடலையும் அழிக்க கூடிய விஷயமே கச்சித தன்மை என்பது ஓர் உன்னதம் இல்லை. அது ஒரு குறைபாடே. அதேபோல் அது ஒரு நோயாகவும் மாறும் வாய்ப்பு அதிகம். காரணம், நாம் அப்பழுக்கற்ற வாழ்வியல் முறையை கடைப்பிடிக்கும்போது மற்றவர்களின் குறைகள் அதிகமாக தெரிய வருகின்றன. அதன் பொருட்டே நாமும் குறைகளற்ற கச்சிதமான மனிதர்களாக இருக்க வேண்டிய நிர்பந்தமும் அதிகமாகிறது.

அப்படி யதார்த்த வாழ்வில் இருக்கவிடாமல் செய்யும்போது மிக அதிகமான மனசிக்கல்கள் ஏற்பட்டு எண்ண சுழற்சி நோய்க்கு (obsessive compulsive disorder) ஆளாகிறார்கள். விஸ்வத்துக்கும் இதே பிரச்னை தான்.
அம்பாளுடன் தனக்கு இப்படியான எண்ணங்கள் வருவதே தன்னாலேயே சகித்துக்கொள்ள முடியாத சூழலில் மீண்டும் மீண்டும் குளித்து அவரால் கோயில் வேலைகளிலேயே ஈடுபட முடியாமல் போய் விட்டது. எண்ண சுழற்சி நோயை மனித மனதால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இடையூறு செய்யும் எண்ணங்களை அது தொடர்ச்சியாக ஏற்படுத்திய வண்ணமே இருக்கும். நோயாளியின் அன்றாட வாழ்வியியலே பாதிக்கப்படும் என்பது விஸ்வத்தின் வாழ்வை முன்வைத்தே புரிந்து கொள்ளக் கூடியது. ஷேக்ஸ்பியரின் ‘லேடி மேக்பத்’ கையில் ரத்தக் கறை இருப்பது போல் புலம்பிக்கொண்டு கைகளை கழுவிக்கொண்டே ‘அரேபிய நறுமணப் பொருட்களும் என்னை மீட்காது’ என்று சொல்வதன் அடையாளமும் இந்த நோயே..
இது அபத்தம் என்று தோன்றினாலும் அவர்களால் அதை விட்டொழிக்க முடியாது. சில விஷயங்களை அவர்கள் சடங்கு மாதிரி செய்வார்கள். பத்து தடவை சாமி கும்பிடுவது மாதிரியான விஷயங்கள் இதன் வெளிப்பாடே. யதார்த்தமான உடல் தேவைகளை புறந்தள்ளாமல் அதைப் புரிந்துக்கொண்டு கச்சிதங்களுள் சிக்காமல் வாழ்வதே மன அழுத்தங்களிலிருந்து தப்பிக்க வைக்கும்.
யாரையும், யார் வாழ்வையும் சில நேரம் துலாபாரக் கோல்களோடு நாம் மதீப்பீடு செய்ய முடியாது. ஆனால், நாம் நம் விழுமியங்களை முன் வைத்து அதை செய்தபடியே இருக்கிறோம். வாழ்வின் மிகப் பெரிய விடுதலையே கச்சிதமான விழுமியங்களிலிருந்து நாம் நம்மை விலக்கிக் கொள்வதே. அதை புரியவைத்த பிறகு விஸ்வமும் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.

Dr. Sunil Kumar                                                            Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                                     counselling psychologist
Founder- Mind Zone                                                      co-founder, Mind Zone
Call: 9444297058                                                           Call: 9176055660