CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Thursday 14 December 2017

Manam yennum mayakkannadi (Tamil Article No.8)

மனம் என்னும் மாயக்கண்ணாடி- 8

பார்கவி. பார்க்க மிக அமைதியாக இருந்தாள். இரண்டு கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள். அவளின் மவுனத்திற்கும் வார்த்தைக்கும் இடையில் குற்றவுணர்வு ஒளிந்திருந்தது. அது கணவன் அல்லாத வேறு ஆணோடு அவளுக்கு இருந்த உறவு சம்பந்தப்பட்டது அந்தக் குற்றவுணர்வு.
பார்கவிக்கும் அசோகனுக்கும் கல்யாணமானதிலிருந்தே அவர்களிடையில் சரியான இணக்கமில்லை. அதற்கு முக்கிய காரணம் அவனது குடிப்பழக்கம் தான். ஆரம்பத்தில் அவ்வப்போது குடிக்க ஆரம்பித்தவன் பின் அதிகமாக அதற்கு அடிமையானான். அது எங்கு எதிரொலித்தது என்றால் அவனது தாம்பத்ய வாழ்வில் எதிரொலித்தது. அவனால் அவளை திருப்திப்படுத்த இயலவில்லை. சில போதை பொருட்களையும் அசோகன் உட்கொள்வது உண்டு. குடியின் மிகக் கொடிய தாக்கம் இதுவாகவே பெரும்பாலும் இருக்கிறது. அவ்வளவாக உரையாடப்படாத பகுதியாகவும் உள்ளது.
பார்கவி அதை சமன்படுத்தும் முயற்சிகளை எடுப்பாள். அவளாகவே அவனுக்கு அழைப்பு விடுத்தும் அவனால் அவளை எந்தநிலையிலும் திருப்திப்படுத்த இயலவில்லை. அதை சமாளிக்கும் பொருட்டு அவன் அவளை அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி நடந்து கொள்வதுண்டு. அதனாலேயே தனக்குள்ளாகவே அவள் தனது பாலியல் வேட்கையை மறைத்து வைத்துக் கொண்டிருந்தாள். பதிமூன்று வருடங்கள். இடையில் ஒரு குழந்தையும் வேறு.
பின் மெல்ல மெல்ல அது எதிர் தெரு நபருடனான உறவாய் மாறிற்று. முதல் முறையாக அவளது பாலியியல் வறட்சியில் மழை பெய்தது. முதல் ஆறுமாதங்கள் அதை முழுமனதாக அனுபவித்தாள். ஆனால், அதற்குப் பிறகாக அவள் அதை குற்றமாகப் பார்க்க ஆரம்பித்தாள். அவ்வூரிலிருந்து வெளிவர வேண்டுமென விரும்பினாள். குற்றவுணர்வே அவளுக்கு மிக மோசமான மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் அலைப்பாய்கிறாள் பார்கவி.
பாலியியல் வேட்கை, அதில் இணைந்திருக்கும் குற்றவுணர்வு, அதை வேறு நபரிடம் தோன்றினால் ஏற்படும் கூடுதல் குற்றவுணர்வு எல்லாமே சமூகம் நமக்கு முன் ஏற்படுத்தியிருக்கும் ஏமாற்று வேலை தான். பல பெண்களால் தங்கள் பாலியியல் வேட்கையையோ பாலியியல் தேடலையோ இச்சமூகத்தில் வெளிப்படுத்தக் கூட முடியாது. கற்பு என்பதே அந்த ஏமாற்று வார்த்தையாக இருக்கிறது.

பார்கவி தயங்கி சொன்ன விஷயம் இதுதான். என்னுடைய பாலியல் தேவைகள் என் வாழ்வில் பூர்த்தி ஆனதேயில்லை. நம் கலாசாரத்தில் மிகுந்த பரப்பரப்பாக பேசப்படும் விஷயம் கற்பு. குறிப்பாக, பெண்களைப் பற்றி பேசும் போது இவ்விஷயத்தை மிக கவனமாக கையிலெடுப்பார்கள். கன்னித்தன்மை என்னும் வார்த்தை கற்பு அரசியலில் மிக நுட்பமான கூறுகள் கொண்ட ஒரு வார்த்தையாகும். கன்னித்திரை என்பது அவர்கள் கோட்பாடுகளில் ஒரு பெண்ணிற்கு கணவனால் மட்டுமே கத்தரிக்க வேண்டிய கத்திரிக்கோல்.
வாழ்வின் பெரும் சவால்களில் ஆனால் கன்னித் திரை என கூறப்படுவது பெண் சைக்கிள் ஓட்டினால் கூட கிழிந்து தான் போகும். என் தோழியின் முதலிரவில் உடலுறவுக்குப் பின் அவள் கணவன் போர்வையில் ரத்தம் தேடிய கதையை அவள் இன்னமும் உரக்க சொல்லி சிரிப்பாள். பெண்களை இதை முன்வைத்தே கற்புக்கரசி என்றும் வீட்டின் கன்னி தெய்வம் என்றெல்லாம் அடையாளப்படுத்தி கொண்டாடுகிறார்கள். பூஜை கூட செய்கிறார்கள். பல சாமியார்கள் பரிகாரமாய் கன்னித் தெய்வத்திற்கு படையல் வைங்க என்று சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன்.
மருத்துவரீதியாகவே ஒரு பெண்ணை ஒரு ஆண் உடல்ரீதியாக அணுகுவது மற்றும் திருப்தியளிப்பது என்பது மிக சிரமமான விஷயம். ஒரு ஆணால் மூன்று நிமிடங்களுள் உச்சம் அடைய முடியும். ஆனால், ஒரு பெண்ணுக்கு உச்சநிலையை எட்டுவதென்பதற்கு சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். இந்த ரீதியில் அணுகினோம் என்றால் பெரும்பாலான ஆண்களால் பெண்களை திருப்திப்படுத்த முடியாது. அப்படி நேரும் போது பிற உறவுகளில் ஈடுபட நேர்கிறது. இதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருதரப்பிலும் நியாயங்களை வைக்கும் அளவிற்கே இவ்விஷயங்கள் குறித்த சமூக புரிதல் உள்ளது . இது துரதிஷ்டமே.
ஒரு ஆணால் இன்னொரு பெண்ணை வெகு சுலபமாக தன் வாழ்வில் சேர்த்துக் கொள்ள இயலும். ஆனால், ஒரு பெண்ணால் அது சுலபமாக இயலாது. அவளது தனிமையிலும் பெருமூச்சிலும் தான் அவளின் வெற்றிடங்கள் கரைந்து போகும். அந்நோன்யத்திற்கான பசி ( hunger for intimacy ) என்று அது அழைக்கப்படுகிறது. பைபிளில் பத்து கட்டளைகளில் பிறன் மனையை நினைக்காதே என்று இருக்கிறது. ஆனால், யதார்த்த வாழ்வில் அப்படியொரு சூழலை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
ஒரு பக்கம் அப்படி முதன்மை உறவில் திருப்தியடையாத ஆணோ பெண்ணோ வேறு உறவுகளில் ஈடுபடுவது இயற்கையே. ஆனால், சமூக நிர்பந்தங்களினால் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலைக்குக் கூட ஒழுக்கவரையுறுகளால் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

பார்கவிக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்த சிகிச்சையே அவளை குற்றவுணர்விலிருந்து மீட்பதே ஆகும். முக்கியமாக புராண கதைகளில் ஆண்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதை புரிய வைப்பதிலிருந்து ஆரம்பிக்கும் உரையாடல் அது. உடல் என்பது அருவெருப்பானது என்ற சமூகத்தின் பெரும் தீ ர்மானத்தை தொடர் உரையாடல்கள் மூலமே தீர்க்க முடியும். அல்லது தீர்வை நோக்கி நகர முடியும்.
விவாகரத்து செய்து கூட தனக்கு வேண்டிய வாழ்வை நம்மில் பலர் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், குழந்தைகள் பாதிக்கப்படுமே என்பதால் அதை செய்ய மறுக்கும் பலர் தங்கள் மன தாபங்களை, அந்நோன்யத்தை ரகசிய உறவுகளின் மூலம் தீர்த்துக் கொள்கின்றனர்.
சரி தவறு என்னும் துலாபாரம் அற்றதாகவே உறவு சிக்கல்கள் உள்ளன. பார்கவியைப் போல இன்றுபல ஆண்கள் பல பெண்கள் இருக்கின்றனர். அவர்களை பெரும் குற்றம் இழைத்ததாக இந்த சமூகம் பார்ப்பது தான் இந்த சமூகத்தின் பிழை. உடல் குறித்த புரிதல் என்பது ஏற்படும் வரை இந்த சிக்கல்களோடே தான் மனித இனம் நகரும். அச்சிக்கலை மனச்சிக்கலாக்கி அழுத்தங்கள் கொடுக்கும்.

Dr. Sunil Kumar                                       Dr. jayasudha kamaraj
Clinical Psychologist                                Counseling Psychologist
Founder - Mind Zone                                co-founder, Mind Zone

Manam Yennum mayakkannadi (Tamil Article No. 10)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 10

முருகனை மனநல பாதுகாப்பகத்துக்கு அழைத்து வந்ததன் நோக்கமே அவன் வெளியே இருந்தால் யாராவது அவனைக் கொலை செய்துவிடுவார்கள் என்பதே ஆகும். எந்தவிதமான கொலை வழக்கும் அவன்மீது இல்லை. ஆனால், அவனுக்குக் கஞ்சா மற்றும் குடிப் பழக்கங்கள் இருந்தன.
முருகனின் மேல் நாற்பத்தைந்து வழக்குகள் உள்ளன. இதில் செயின் பறிப்பு வழக்குகள் அதிகம். இத்தகைய குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் அவன் நண்பர்களும் நண்பர்களோடான பழக்கமும்தான். முருகனின் அப்பா ஒரு கவுன்சிலர். அம்மா வேலைக்குப் போகவில்லை. ஒரே தங்கை. நண்பர்களோடான பழக்கம் கஞ்சா பழக்கத்துக்கும் குடிப்பழக்கத்துக்கும் ஆளாகிறான். சிறு வயதிலிருந்தே யார் பேச்சையும் கேட்காமல் வளர்கிறான்.
முருகன் யார் என்று யோசித்தால் அது ஹாசினியையும் தன் சொந்த அம்மாவையும் கொலை செய்த தஸ்வந்த் போன்ற ஒருவன்தான். இவ்வகையான மனநிலைக்குப் பெயர், சமூக விரோத எதிர் குணாதிசயம். இதை வலியுறுத்த பெரும் ஆராய்ச்சிகள் நடைப்பெறாத போதிலே ஒரு குற்றவாளியின் மூளையைப் பிரேத பரிசோதனை செய்து பார்த்தபோது அவனது மூளை மற்ற சாதாரண மனிதர்களின் மூளையைக் காட்டிலும் வித்தியாசப்படுவதை மருத்துவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதிலிருந்தேதான் குற்றவாளிகள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா என்ற பட்டிமன்றமே உருவானது.
அதன் பிறகுதான் குற்றம் என்பதே மரபணுக்களால் ஏற்படும் பாதிப்பு என்னும் வாதம் உருவாயிற்று. அதாவது ஒரு குற்றவாளியின் மகன் குற்றவாளியாகவே இருப்பான், ஒரு வாத்தியாரின் மகன் வாத்தியாராகவே இருப்பான் என்னும் நம்பிக்கை சார்ந்த புரிதல் பேசப்பட்டது. இது எதுவுமே தீர்மானமான ஒரு முடிவைத் தரவில்லை என்பதே உண்மை. ஒரு வாத்தியாரின் குழந்தை குற்றவாளியாகச் சமூகத்தின் முன் நின்ற போதான நொடியில் இந்தத் தீர்மானமின்மை கிளைவிட்டது.

இப்படி மூளை நோயியல் அல்லது மரபணுவால் ஏற்படும் பாதிப்புகள் மருத்துவ ரீதியாக ஒரு செயற்பாட்டு காரணத்தைக் கொடுப்பதால் பொதுவான ஒரு தீர்மானமே கிட்டியதால் மூளையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் நடந்தன. அதில் மூளையிலிருக்கும் ஒரு பகுதி நம் மனத்தூண்டுதலைக் கையாள்கிறது என்பது குறிக்கப்பட்டு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சமூகக் குடும்ப மன சூழல் காரணமாக இந்த தூண்டப்படும் புள்ளி வேறுபடுவதாகச் சொன்னார்கள். ஒரு கேள்வியை முடிக்கும் முன்பே பதில் சொல்லும் செய்கைகூட இத்தகைய தூண்டுதலில் இருந்து கிளர்ந்தோடுவதுதான். இதுபோன்ற தூண்டுதல்கள் மிதமிஞ்சிப் போகும்போது அது சமூக விரோத எதிர் குணாதிசயம்.
முருகனைப் போலவே சிறுவயதிலிருந்தே யார் சொல்வதையும் எதையும் கேட்க மறுக்கும் தூண்டுதல் மனோபாவம்தான் பிற்காலத்தில் இந்தச் சமூக விரோத குணாதிசயத்தை அதிகரிக்க வைக்கிறது என்பதே அடிப்படையான புரிதலாகவும் தீர்மானமாகவும் கொள்ளப்பட்டது
இதன் நீட்சியாக ஏழ்மையில் இருப்பவர்கள் குற்றவாளியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. வீடற்றவர்கள், சிறுவயதில் வன்முறையைப் பார்த்தவர்கள், சிறு வயதில் உடல் வன்முறையை அனுபவித்தவர்களில் பெரும்பாலானோர் இத்தகைய உளவியல் ரீதியிலான தூண்டுதலுக்கு உள்ளாவதுண்டு. அதுவே சமூக விரோத குணாதிசயத்தைத் தூண்டுகிறது. ஏன் வன்முறை செலுத்தப்பட்டவர் வன்முறையாளராக ஆகிறார் என்றால் அதற்கான காரணம் உடல் அதிகாரத்தால் கிடைக்கும் சக்தியை எதிர்மறையாக அனுபவித்திருக்கிறார் என்பதால் மட்டுமல்ல. இந்தச் சமூகத்தையே அவர் பழி தீர்த்துக்கொள்ளும் செயலாக நினைக்கிறார் என்பதே உண்மை.

எப்போது தனக்கு அங்கு ஒரு பாதுகாப்பு ,அங்கீகாரம் இல்லை என்று உணர்கிறார்களோ, அப்போது அவர்கள் யார் மீது அதிகாரத்தை, வன்முறையை செலுத்துகிறார்களோ அவர்கள் சமூகமாகக் கண்களுக்குப் புலப்படுகிறார்கள். இதுதான் ஒரு பொத்தாம் பொதுவான தீர்மானங்களை இயற்றுகிறது. இஸ்லாமியர்கள் மீதான சமூக விரோத கண்ணோட்டம் இங்கிருந்து கிளை விடுவதுதான். இப்படி மன அரசியலின் பின்புலத்தில் உலகலாளவிய அளவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இனத்தை ஒடுக்கப்படும் முயற்சிகள் நிகழ்கிறது.
ஒடுக்கப்பட்டோர் குற்றவாளியாக இருப்பார்கள் என்னும் நிலைப்பாடு எப்படி உண்மையாக இருக்க முடியும். ராயபுரத்தில் பட்டாக்கத்தி எடுத்து வெட்டுபவனும் மயிலாப்பூரில் கம்ப்யூட்டர் ஹேக் செய்பவனும் சம பங்கு குற்றவாளிதான்.
முருகனைப் போல் இவ்வகைக் குற்றவாளிகளின் சமூக விரோதத்தன்மை சிறுவயதிலிருந்தே சில சில அறிகுறிகளாகத் தெரியும். பின் பதின்ம வயதில் பள்ளிக்குப் போகாமல் இருப்பது, சினிமாவுக்குப் போவது, சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுதன் மூலம் இந்த குணாதிசயம் வேர் ஊன்றும். சிறு வயதில் இதை நடத்தை சீர்குலைவு என்று சொல்வோம். இது வளர வளர சமூக விரோதத் தன்மையாக மாறுகிறது. ஒரு குழந்தை எதிர்வினையாக செயல்பட்டால் அதை முதலிலேயே மனநல ஆலோசகர்களிடம் கூட்டி வந்திருக்க வேண்டும். அதற்குச் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இந்த மலை விழுங்கும் குணாதிசயத்துக்கு இரையாகிவிட வேண்டியது தான்.
பச்சாதாபம் அவர்களுக்குச் சுத்தமாக இருக்காது. அதேநேரம் தன்னிச்சையாய் தூண்டப்பட்டு சிறிதும் யோசிக்காமல் காரியங்கள் செய்வார்கள். முருகனும் அப்படியே போதைக்காகவும் ஜாலியான வாழ்வு என்று அவன் நினைத்திருக்கும் வாழ்வுக்காகவும் பின் விளைவுகளைச் சற்றும் யோசிக்காமல் திருட ஆரம்பித்தான். எப்போதும் திமிராகவே நடந்து கொள்வான். எந்தச் சட்ட திட்டமும் அவனுக்கோ அவன் வாழ்வுக்கோ இல்லை. யாருக்காகவும் மனம் இரங்கும் தன்மையிராது. பணத்துக்காக மட்டும் கேட்பது போல நடித்துவிட்டு பின் மனம் மாறுபவர்கள். எல்லாமே உடனே நிகழணும். ஒரே பாட்டில் அம்பானி ஆகணும் கதையாக தான் முருகனுக்கு இருந்திருக்கிறது.
நம் சமூகத்தின் அவலமே இப்படியான தனிமனித மன குணாதிசயங்களை அவனிருக்கும் இடம் வைத்தோ, சாதி, மதம் வைத்தோ பொதுப்படையாக பேசுவதன் மூலம் அந்த இடம், சாதி, மதம் குறித்த அடையாளம் ஒன்றை முத்திரையிடுவதுதான். அது போலவே இவர்களின் இத்தன்மையைச் சுய அரசியல் லாபங்களுக்காக குடும்பங்களிலும் அதேநேரம் சமூகத்திலும் பயன்படுத்தி அதிகாரங்களைத் தனக்குரியதாக்கிவிட்டு பின் இவர்களை மட்டும் சமூக விரோதிகளாக அடையாளம்காட்டி இவர்களை அழிப்பதும் சமூகம்தான். ஆக, இவர்களை உருவாக்குவதும் அழிப்பதும் சமூகம்தான். இந்தச் சமூக உளவியல் சிக்கலை ஆராய்ந்தோமானால் நமக்குப் புரிபடும் முக்கியமான விஷயம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஒடுக்குமுறைகளும் பொருளாதார ஏற்றதாழ்வுகளுமேதான்.
எங்கு, எப்போது நீதி தன் கடமையைச் செய்யவில்லையோ அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து இப்படி ஒரு சமூக விரோத எதிர் பிரதிநிதித்துவம் பிறக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, முருகன் என்பவன் முருகன் மட்டுமல்ல; முருகனுக்கான சிகிச்சை என்பது முருகனுக்கானது மட்டுமல்ல; இந்த சமூகத்துக்கானதாக இருக்க வேண்டாம். ஒட்டுமொத்த சமூகத்தின் உலவியல் தன்னிச்சை செயல்பாடுகளிலும் ஒற்றை மனிதனை சிகிச்சைக்கு உட்படுத்துவதால் உடனடியாக மாறிவிடாது. இது ஒரு சமூக மாற்றத்தின் பிம்பமாக மட்டுமே பிரதிபலிக்க வேண்டியது.

நம் கல்வி திட்டங்களில் மாற்றங்கள், காவல் துறையில், பள்ளி ஆசிரியர்களில் உணர்திறனை கூராக்குவதன் மூலமே இது சாத்தியப்படும். நீதித் துறையும் இதில் உள்ளடக்கமே. சிறை என்பதன் அர்த்தம் குற்றவாளி மனம் மாறுவதுதான். ஆனால், அந்த மாற்றம் நிகழ்வதற்கான மாற்றம் எதுவுமே நிகழ்த்தப்படவில்லை. சிறையும் மனநல காப்பகங்களும் அதனால் ஒன்றாகவே இருக்கிறது. சமூகத்தால் சமாளிக்க இயலாதவர்களின் கூடாரமாகவே இவை அமைந்திருக்கிறது. சிக்கல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதைக் கண்டறியாமலே ஓர் உதிரி சமூகத்தை உருவாக்குவதன் மூலம் மேலும் சிக்கலைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.
முருகனைப் போல சமூக விரோத குணாதிசயம் கொண்ட மனிதர்களால்தான் பெண்களுக்கு உடல் வன்முறையும் நிகழ்கிறது. அவர்களின் காம உணர்வு இடம், பொருள், பின் விளைவு எதையுமே பார்ப்பதில்லை.
முருகனை மொத்தம் ஆறு பள்ளிகளில் வெவ்வேறு பிரச்னைகளால் மாற்றியிருப்பதாகச் சொல்கிறார் அவர் அப்பா. அப்போதே முருகனுக்கு மனநல உதவி தேவைப்பட்டிருக்கிறது, அத்தகைய சிறு வயது கண்டுணர்தலும் ஆலோசனையும் முருகனை மீட்டிருக்கக் கூடும். முருகன் அதன்பின் வீட்டுக்கு வராமலும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமலும் நாள்கள் நகர்ந்தன. அவனை வேறு சிலர் கொலை செய்ய முயற்சிக்கும்போதே அவன் குடும்பத்துக்கு நிலைமையின் தீவிரம் புரிகிறது.
ஹாசினியைக் கொன்றவனின் நிலமையும் இதுதான். ஹாசினியைக் கொன்றபோது அவனை ஜாமீனில் எடுக்க வீட்டையெல்லாம் விற்ற அவன் அம்மா அப்பாவையே கொலை செய்ய எண்ணும் அவனது சமூக விரோத மனம் தன்னிச்சை செயல்பாடுகளால் உந்தித் தள்ளப்பட்டதே. அதற்கு நன்றி பாராட்டுதலோ, மனித மாண்புகளோ கிடையாது. இக்குணாதிசயமே சமூக அநீதிகளுக்குட்படும்போது சமூக விரோத செயல்களாக உருவெடுக்கிறது.
ஆக, முருகனை சிகிச்சையின்பேரில் அவனது தன்னிச்சையான உணர்வை கோர்வைப்படுத்த முயல்வதே அவனை மீட்கும் முயற்சி. ஆனால், அது நூறு சதவிகித வெற்றியாகுமா என்பதை உறுதியளிக்க முடியாது. தன்னிச்சை கட்டுப்பாட்டுக்கான பயிற்சிகள் கொடுக்கப்படுவதன் மூலம் மாற்றத்துக்கான முயற்சியை மேற்கொள்ளலாம். சமூகத்தின் நேர்மையற்ற ஏற்றதாழ்வுகளை சரி செய்தாலன்றி நம்மில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான முருகன்கள் மனநலத்துடன் இருப்பது சிரமமே.

Dr. Sunil Kumar                                                  Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                           Counseling Psychologist
Founder - Mind Zone                                           Co-founder, Mind Zone

Wednesday 6 December 2017

Manam Yennum Mayakkannai - Part - 9 (Article in Tamil)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 9

விஸ்வநாதனைச் சந்தித்த முதல் நொடி அவரின் கூச்ச சுவாபம்தான் என் கண்ணிலும் புத்தியிலும் உடனடியாக அவரைப் பற்றி பதிந்த அபிப்பிராயங்கள். விஸ்வம் ஒரு கோயில் பூசாரி. மிகவும் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து குலப்பெருமையைக் காப்பதே வாழ்க்கை என்று நினைக்கும் ஒருவராகவே விஸ்வம் இருந்திருக்கிறார். பதின்ம வயது சுய கட்டுப்பாட்டு கோட்பாடுகளில் ஒன்றாக அவருக்குப் பெண்கள் மீது எந்தவித பாலியல் ஈடுபாடும் வந்துவிடக் கூடாது என்பது அதில் முக்கியமான ஒன்று.
அதன்படியே அவரது வாழ்க்கையும் நகர்ந்தது. பெண்பால் ஏற்படும் இயற்கையான ஈடுபாடு தவறு என்றே நினைக்கிறார். விரும்பியபடியே கோயில் பூசாரியாக ஆகிறார். அதன்பிறகு, வாழ்க்கை நன்றாக தான் போகிறது. வாழ்க்கையில் கச்சிதமான வழிநெறிகள் தவறாத மனிதராக (பர்ஃபெக்ஷ்னிஸ்டாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர். யார் மனதையும் எந்தக் காலகட்டத்திலும் காயப்படுத்தக் கூடாது. அதேபோல் எந்த பெண்ணையாவது பார்த்தது யாருக்காவது தெரிந்து விட்டால் அது தனக்கும் தன் குலத்துக்கும் அவமானம் என நினைத்தார்.
என்ன தான் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும் நம்மை ஆள செய்தாலும் மனம் என்பது தன் போக்கில் இயற்கை உந்துதலின் வழியே செல்லும். அந்த வயதிற்கு இயல்பாக இருக்கக் கூடிய இச்சைகளை மனதும் உடலும் நிராகரிக்காது. அப்படி நிராகரித்து விட்டதாக சொல்வது போலியானது. ஆனால், சமூகம் கட்டமைத்த போலியான கோட்பாடுகளாலும் உடல் என்பதை அசிங்கத்தின் தொடர்ச்சியாக பார்க்கும் மனநிலையின் நீட்சியாகவும் நம் போலிகளையே நிஜமென நம்புகிறோம். அப்படியான மனநிலைக்குத்தான் விஸ்வமும் தள்ளப்பட்டார்.

எப்போது இதுபோன்ற உணர்வுகளை அடக்கி வைத்தோ, மறுதலித்தோ வாழ்ந்தால் அது தன் இயற்கையான வழியை தானே கண்டடையும். இது தான் நியதி. இப்போது தான் விஸ்வத்துக்கு தன் நடவடிக்கை குறித்து நிறைய கேள்விகள் வந்தன. அடிக்கடி குளிக்க ஆரம்பித்தார். அவர் குளித்து கிளம்பி பாதி தூரம் கோயிலுக்குப் போகும் பாதையில் பின்பு திரும்ப வீட்டுக்கு வந்து மீண்டும் குளித்து கிளம்புவார். குளிப்பதும் நாம் ஒற்றை வார்த்தையில் சொல்வது போல சாதாரணக் குளியல் இல்லை. சோப்பைப் போட்டு தேய்த்து, பின் தேய்த்து தேய்த்து, தேய்த்தான குளியல். அவரது தோலே நிறம் மாறி போகும் அளவுக்கான குளியல் அது. அப்போது தான் தனக்கு மனநல ஆதரவு தேவை என்று கருதி சிகிச்சை எடுக்க முன்வருகிறார்.
மனநல மருத்துவர்களிடம் தன் நிலையை சொல்பவரால் எல்லாமே மனம்விட்டு சொல்ல முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அது குறித்த அவரது கோட்பாட்டு விழுமியங்கள் வேறாக இருந்தன. பேசப் பேசவே தன் மனதின் இடுக்குகளில் சிக்கிக்கிடந்த ரகசியத்தை பகிர்கிறார். அதன்படி அவருக்கு அம்பாளின் மேல் பெரும் பிரேமம் இருக்கிறது. அம்பாளுக்கு உடை மாற்றும்போதும் பூஜைக்கு தயார் செய்யும் போதும் இந்த நினைவு கசடாய் வந்து நிற்க அவரால் தான் கறைப்பட்டு விட்டோம் என்ற நினைவை தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதன் காரணமே அவர் அடிக்கடி குளிக்க ஆரம்பிப்பது. பூலோகப் பெண்களையே நினைத்து பார்க்கக் கூடாதென நினைக்கும் என்னை இப்படி அம்பாளையே தவறாய் நினைக்கும் அளவுக்குக் கொண்டு வந்தது என்ன? எது என்னை இந்த தீய எண்ணத்திலிருந்து மீட்கும்? எது என்னை புனிதப்படுத்தும் என்ற சுயபோராட்டத்தின் விடையே அந்த குளியல்.
நம் சமூகத்தில் பொதுவாகவே கச்சிதமாக வாழ்பவர்களாக இருப்பவர்கள் எல்லாமே அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். கச்சிதம் என்று ஒன்றும் இல்லை. அதை யார் நிர்ணயிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் கோட்பாடுகள் அமையும். அது சாதி, மதம் பிராந்தியம் சமபந்தமான நீட்சிகள் உடையது. அதன்படி வாழ்வதென்பது உலகப்பிராகரமாக முடியாத காரியம். அதனால் யதார்த்த வாழ்வில் முரண்பட்டு இக்கச்சிதங்கள் சிதையும்போது மனச்சிதைவும் அழுத்தங்களும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருகின்றன. மன அழுத்தம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனதையும் உடலையும் அழிக்க கூடிய விஷயமே கச்சித தன்மை என்பது ஓர் உன்னதம் இல்லை. அது ஒரு குறைபாடே. அதேபோல் அது ஒரு நோயாகவும் மாறும் வாய்ப்பு அதிகம். காரணம், நாம் அப்பழுக்கற்ற வாழ்வியல் முறையை கடைப்பிடிக்கும்போது மற்றவர்களின் குறைகள் அதிகமாக தெரிய வருகின்றன. அதன் பொருட்டே நாமும் குறைகளற்ற கச்சிதமான மனிதர்களாக இருக்க வேண்டிய நிர்பந்தமும் அதிகமாகிறது.

அப்படி யதார்த்த வாழ்வில் இருக்கவிடாமல் செய்யும்போது மிக அதிகமான மனசிக்கல்கள் ஏற்பட்டு எண்ண சுழற்சி நோய்க்கு (obsessive compulsive disorder) ஆளாகிறார்கள். விஸ்வத்துக்கும் இதே பிரச்னை தான்.
அம்பாளுடன் தனக்கு இப்படியான எண்ணங்கள் வருவதே தன்னாலேயே சகித்துக்கொள்ள முடியாத சூழலில் மீண்டும் மீண்டும் குளித்து அவரால் கோயில் வேலைகளிலேயே ஈடுபட முடியாமல் போய் விட்டது. எண்ண சுழற்சி நோயை மனித மனதால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இடையூறு செய்யும் எண்ணங்களை அது தொடர்ச்சியாக ஏற்படுத்திய வண்ணமே இருக்கும். நோயாளியின் அன்றாட வாழ்வியியலே பாதிக்கப்படும் என்பது விஸ்வத்தின் வாழ்வை முன்வைத்தே புரிந்து கொள்ளக் கூடியது. ஷேக்ஸ்பியரின் ‘லேடி மேக்பத்’ கையில் ரத்தக் கறை இருப்பது போல் புலம்பிக்கொண்டு கைகளை கழுவிக்கொண்டே ‘அரேபிய நறுமணப் பொருட்களும் என்னை மீட்காது’ என்று சொல்வதன் அடையாளமும் இந்த நோயே..
இது அபத்தம் என்று தோன்றினாலும் அவர்களால் அதை விட்டொழிக்க முடியாது. சில விஷயங்களை அவர்கள் சடங்கு மாதிரி செய்வார்கள். பத்து தடவை சாமி கும்பிடுவது மாதிரியான விஷயங்கள் இதன் வெளிப்பாடே. யதார்த்தமான உடல் தேவைகளை புறந்தள்ளாமல் அதைப் புரிந்துக்கொண்டு கச்சிதங்களுள் சிக்காமல் வாழ்வதே மன அழுத்தங்களிலிருந்து தப்பிக்க வைக்கும்.
யாரையும், யார் வாழ்வையும் சில நேரம் துலாபாரக் கோல்களோடு நாம் மதீப்பீடு செய்ய முடியாது. ஆனால், நாம் நம் விழுமியங்களை முன் வைத்து அதை செய்தபடியே இருக்கிறோம். வாழ்வின் மிகப் பெரிய விடுதலையே கச்சிதமான விழுமியங்களிலிருந்து நாம் நம்மை விலக்கிக் கொள்வதே. அதை புரியவைத்த பிறகு விஸ்வமும் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.

Dr. Sunil Kumar                                                            Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                                     counselling psychologist
Founder- Mind Zone                                                      co-founder, Mind Zone
Call: 9444297058                                                           Call: 9176055660

Tuesday 21 November 2017

manam yennum mayakkannadi (Tamil Article No. 7)

மனம் என்னும் மாயக்கண்ணாடி – 7

சபேசன் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்துப் பையன். பெண்களைப் பற்றி அவனுக்குப் பெரிதாக நல்ல அபிப்பிராயங்கள் கிடையாது. தனது பத்தொன்பது வயதில் முதன்முறையாக நண்பர்களுடன் குடிக்க ஆரம்பிக்கிறான் சபேசன். ஆச்சாரமான வீட்டு சூழலில் அடக்கி வைக்கப்பட்ட உடலியியல் இச்சைகள் குடித்த பிறகு பாலியியல் உரையாடலாக மாறும். தங்களது பாலியியல் சாகசங்களை, எத்தனை பெண்களை தங்களால் அந்தந்த வாரம் உடலுறவு கொள்ள முடிந்தது போன்ற பொய்யான கணக்குகளைப் பகிர்ந்துகொள்ளும் தருணமாக, தங்கள் ஆண்மையை சமூகத்திற்குப் பறைசாற்றும் தருணங்களாக மாறின.
அவர்கள் குடித்துவிட்டுப் பேசும்போது பெண்களில் பலர் மோசமானவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். ஆசிரியர்களாக இருக்கும் பெண்கள், +2 போல் படிக்கும் விடலை மாணவர்களுடன் உறவு கொள்வார்கள். இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் மோசமானவர்கள். சத்தமா சிரிச்சி பேசும் பெண்கள் மோசம். அதே போல் பெண்களுக்கு வாரம் இருமுறை உடலுறவை கணவன் “கொடுத்து”விட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வேறு ஆண்களிடம் அதைத் தேடுவார்கள் போன்ற மாயைகளை நிஜமென நம்புகிறான் அவன்.
கல்யாண வயது வந்து விட்டதாய் அவன் வேலைக்கு வந்தவுடன் அவர்கள் குடும்பத்தில் தீர்மானித்து அவனுக்குப் பெண் பார்க்க அவன் பார்க்க சென்றது தான் சத்யா. சத்யா ஒரு பள்ளி ஆசிரியர். நிச்சயதார்த்திற்கு பிறகு அவள் வேலையை விட்டு விட வேண்டும் என்று அவளிடம் அவன் சொல்ல அவள் ஆசிரியர் வேலை தன் கனவென அவனிடம் சொல்லி தனக்கு சாதகமாய் அவனை மவுனம் காக்க வைக்கிறாள்.
கல்யாணம் ஆகிறது. அவள் இப்போது +2 ஆசிரியராகப் பணி உயர்வு பெறுகிறாள். மாணவர்கள் வீட்டுக்குப் படிக்க வருகிறார்கள். சபேசனின் தீர்மானங்களின் படி அப்படிப்பட்ட விடலை மாணவர்கள் ஆசிரியருடன் உறவு வைத்துக் கொள்ளத் துடிப்பார்கள். ஒருநாள் குடித்து விட்டு வந்து மாணவர்களை அடிக்கிறான் சபேசன்.
மெல்ல மெல்ல தினம் குடிக்க ஆரம்பிக்கிறான். இயல்பாகவே அதனால் அவனுக்கு உடலுறவில் நாட்டம் குறைகிறது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட அளவில் தன்னால் வாராந்தர உடலுறவு கடனை சத்யாவுக்கு கொடுக்க இயலாததால் மிகவும் மனம் வருந்துகிறான். அவள் வேறு ஆண்களிடன் சென்று விடுவாள் என்று நினைக்கிறான். சரியாக அப்போது தான் பேருந்தில் பள்ளிக்கு சென்று வர சிரமம் இருப்பதாக சொல்லும் சத்யா அவனிடம் இருசக்கர வாகனம் கேட்கிறாள். அவன் இடிந்து போகிறான்.
தீராத சந்தேகத்தால் மனநல ஆலோசனை இருவரும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், மீண்டும் மீண்டும் சித்திரவதை தான் சத்யாவிற்கு. ஒருகட்டத்தில் மனம் இழுத்த போக்கில் வீட்டுக்கு மோட்டார் சரி செய்ய வந்த ப்ளம்பருடன் உறவு ஏற்படுகிறது அவளுக்கு. ஒரு கட்டத்தில் ஒரு பிரச்னையில் சபேசன் காலில் விழுந்து தனக்கு ப்ளம்பருடன் இருந்த உறவை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கிறாள். ஆனால், அவன் அதையும் மன்னிப்பதாயில்லை.

அவனது புகாரே அவள் தனக்கு உண்மையாய் இல்லை என்பதும் தன்னை விட தகுதியில் குறைந்த ஒரு ப்ளம்பரோடு உறவு வைத்துக் கொண்டாள் என்பதும் அதற்கு அவர்கள் இருவருக்கும் தான் தண்டனை கொடுக்கவில்லை என்பதும் தான். தன்னிடம் என்ன குறை – குடிப்பழக்கத்தைத் தவிர என்பதே சபேசன் என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்வி.
குடிப்பழக்கத்திற்கும் குடிநோய்க்குமான வித்தியாசத்தை அவன் உண்ரவில்லை. தன் நோயே இத்தகைய சூழல்களை உருவாக்கிற்று என அவன் உணரவில்லை. அவனது பெண்கள் பற்றிய தட்டையான தீர்மானங்கள் அவனை ஒரு குடிநோயாளியாக மாற்றியிருக்கிறதென கூட உணரவில்லை அவன்.
பெண்களைப் பற்றிய அபிப்பிராயம் தானே. அது எப்படி வாழ்வை பாதிக்கும் என்று கேட்டால் சபேசனைத் தவிர வேறு பதில் இருக்க முடியாது. வாழ்வில் நாம் நமக்கே சமாதனப்படுத்தி வைத்திருக்கும் கோட்பாடுகளுக்கும் சமூகம் நம் மீது நிர்பந்தமாக சாத்தியிருக்கும் கோட்பாடுகளுக்கும் யதார்த்த நிஜங்களுக்கும் இடையிலான இடைவெளிகளே சமூக உறவு சிக்கல்களைஉருவாக்குகிறதென யாரும் அறிந்திருப்பதில்லை, அதனாலேயே, மேலும் மேலும் அதை நோக்கி நகரும் போது இத்தகைய உச்சநிலை பேதங்கள் தோன்றுகின்றன.

சாதாரணமாக குடிக்கும் மூன்று பேரில் ஒருவர் குடிநோயாளி ஆகக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறதென்பது தான். அடுத்த முறை எப்போது இப்படி குடிக்கலாம் என்று குடிக்கும் போதே நினைக்க நேரிடுவதே குடிநோயின் முதல் அறிகுறி.
பிறகு, குடிப்பதற்கான காரணங்களை கண்டுப்பிடித்து குடிக்க ஆரம்பிப்பார்கள். அது மிக அடிக்கடி குடிப்பொழுதுகள் அமையுமாறு பார்த்துக் கொள்ளும் மனோபாவம் உருவாகும். ஒருகட்டத்தில் குடி அவனை விழுங்கப் பார்க்க அவன் சபரிமலைக்கு மாலை போடுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு குடியை விட்டு குடியின் பிடியில் தான் இல்லை என்பது போன்ற சுயவிளக்கங்களை மேற்கொள்ள முனைவான். ரத்தத்தில் கலக்கும் மதுவின் வேதியியல் சிக்கல் மூளையைத் தாக்க ஆரம்பிக்கும். பின்னே உடல் தனக்கு குடி வேண்டாம் என்று சொன்னாலும் மூளை தனக்கு போதை வேண்டும் என்று கட்டளையிடும். போதை ஒருகட்டத்தில் எல்லா விஷயங்களுக்கும் சவுகர்யமாக ஆகி விடும். ஒன்று மனதின் துயரங்கள் மறந்து போகும். அடுத்தது வெளிப்படையாய் எந்தவிதமான தயக்கங்களும் இல்லாமல் மனதில் உள்ளவற்றை தைரியமாக சொல்ல முடியும்.
இன்றும் சபேசன் ஒரு மனநலம் பாதித்த குடி நோயாளி தான். டீ-டாக்சிக் என சொல்லப்படும் போதை விஷயங்களை ரத்தத்திலிருந்து களையும் வித்தையை மருத்துவ ரீதியாய் செய்தாலும் மூளையின் செயல்பாட்டை மந்தப்படுத்தி செயல்படுத்த சிகிச்சையும் ஆலோசனையும் தேவை. சத்யாவை நான் சந்திக்கவில்லை. ஆனால், அவள் முகமும் குரலுமாகவே இக்கட்டுரையை இந்த நொடி மனசெங்கும் பரவிக் கிடக்கிறது.

Dr. V. Sunil Kumar                                        Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                      Counseling Psychologist
Founder - Mind Zone                                      co-founder, mind zone
9444 297058

Tuesday 7 November 2017

MIND ZONE: Manam Yennum Mayyakkannadi - Article No.3 (Tamil)

MIND ZONE: Manam Yennum Mayyakkannadi - Article No.3 (Tamil): மனம் என்னும் மாயக்கண்ணாடி - 3 சண்முகம் இயல்பான ஆசைகள்கொண்ட மிக துறுதுறுப்பான இளைஞர். பொறியியல் படிப்பு முடிந்ததும் அவருக்கு மிக நல்ல வேல...

MIND ZONE

MIND ZONE: Manam yennum Mayyakkannadi - Article No. 4 (Tamil)...

MIND ZONE: Manam yennum Mayyakkannadi - Article No. 4 (Tamil)...: மனம் என்னும் மாயக்கண்ணாடி - 4 மனநலம் பாதிப்படைந்தவர்களின் கதைகளைக் கேட்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகப் புலப்படுகிறது. அன்பையும் கவன ஈர்...

MIND ZONE

MIND ZONE: Manam Yennum Mayakkannadi - Article No. 5 (Tamil)

MIND ZONE: Manam Yennum Mayakkannadi - Article No. 5 (Tamil): மனம் என்னும் மாயகண்ணாடி 5 விஜய். பார்க்க மிக அழகான இளைஞராக இருக்கும் அவருக்கு மனநோய் பாதிப்பு இருக்குமென நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. ஆ...

MIND ZONE

Manam Yennum Mayakkannadi - Article No. 5 (Tamil)

மனம் என்னும் மாயகண்ணாடி 5

விஜய். பார்க்க மிக அழகான இளைஞராக இருக்கும் அவருக்கு மனநோய் பாதிப்பு இருக்குமென நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. ஆனால், அவர் மிகத் தீவிரமான மனநோயின் தாக்கத்தில் இருப்பது மனநல மருத்துவர் சொல்லியே எனக்கு தெரிந்தது. அவன் சதா தன் அப்பா முன் வைத்த சவால் விசித்திரமானது. ஒரு கத்தியை அவர் முன்னால் போட்டு ஒன்று நீ என்னைக் கொல்லு அல்லது நான் உன்னைக் கொல்கிறேன் என்பதே அது. கேட்டதும் எனக்கு ஒரு முறை தூக்கி வாரிப் போட்டது.
விஜய் மிக நன்றாக படிக்கக் கூடிய மாணவனாகத் தான் இருந்திருக்கிறான். நன்றாக என்றால் ரொம்பவே நன்றாகவே. அழகான குடும்பம். ஒரே ஒரு தங்கை. வேலை பார்க்கும் பெற்றோர். நம்மை மீறி செயல்படும் சக்தியின் பெயர் கடவுளா விதியா என்று மனித சமுதாயம் ஒருமித்த ஒரு பதில் தெரியாத வரைக்கும் அவன் வாழ்வின் சிக்கல்களுக்கான தத்துவார்த்த பதில் கிடைக்கப் போவதில்லை. பள்ளியில் எந்த பரீட்சையோ, போட்டியோ அவனுக்கே முதல் இடம் கிடைக்கும்.
வீட்டில் இருக்கும் இருசக்கர வாகனத்தை அப்பா இல்லாத போது அவன் நணபர்களோடு பந்தயம் வைத்து ஓட்டி செல்ல அப்பா கண்டு பிடித்து திட்டியும் பழக்கம் தொடர்கிறது. அப்படியொரு நாள் அவன் அப்பாவுக்கு தெரியாமல் வண்டி எடுத்து போய் பந்தயத்தில் வேகமாக ஓட்டி விபத்தில் சிக்குகிறான். உடன் வந்த நண்பர்கள் பயத்தில் அவனை அப்படியே போட்டு விட்டு செல்ல அவனுக்கு மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு ஆக்சிஜன் போகும் பாதையில் தடை ஏற்படுகிறது.

வீட்டுக்கு போன் வந்து பதறி மருத்துவமனைக்கு சென்று மகனைப் பார்த்த அப்பா பதறினார். எவ்வளவு செலவானாலும் சரி மகனை காப்பாற்றினால் போதும் என பெற்றோர் துடிக்க அவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆக்சிஜன் போகாததால் மூளை பாதித்து இருக்கிறதென மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
ஆறு மாத மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு அவன் மீண்டும் பள்ளிக்கு செல்ல அங்கு பாடங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. ஒன்று அவனால் முழுதுமாக சமீபத்தில் நடந்தவற்றை நினைவு வைத்துக் கொள்ள இயலவில்லை. பழைய நினைவுகள் அவன் வசம் முழுதுமாக இருந்தது. அவனுள் அது மிக மோசமான விளைவுகளை மேற்கொண்டது. அது ஏற்படுத்திய தாக்கமே அவனிடம் தேங்கி நின்ற அந்த ஒற்றை கேள்வி. இன்று பதினாறு வருடங்கள் ஆகி விட்டது. ஆனாலும் தொனியிலோ வலியிலோ எள்ளளவும் குறையவில்லை அவனிடம் மிஞ்சியிருக்கும் அந்தக் கேள்வியில் – என்ன ஏன் அப்பா காப்பாத்துன?
பத்தாவது வகுப்பில் மனநல மருத்துவரின் பரிந்துரையின் படி, கூடுதலாக ஒரு மணி நேர அவகாசம் வாங்கி பரீட்சையில் வெற்றி பெற்றான். அது போலவே பன்னிரெண்டாம் மற்றும் அவன் அப்பா சேர்த்த பொறியியல் கல்லூரி படிப்பிலும் அவன் வெற்றி பெற்றான்.
ஆனால், இந்த காலகட்டம் மிக வேதனை வாய்ந்தது. அவனது ஞாபக மறதியை உடன் படிக்கும் மாணவர்கள் கிண்டல் செய்ய அவன் மிக பாதிப்பிற்குள்ளாகிறான். இயலாமையின் தாக்கத்தில் கோபம் வந்து அவர்களை அடிக்க , புகார்கள் குவிந்த காலங்களை அப்பா தனது அரசு பணியின் சக்தியால் வென்றெடுக்கிறார். மிகுந்த மனக்குழப்பத்தில் அவன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிறான். நிறைய சாப்பிட ஆரம்பிக்கிறான். எப்போதும் சமூக வலைத்தளங்களில் உள்ள டேட்டிங் தளங்களில் ஈடுபடுவது. இதை தட்டிக் கேட்டால் அவன் அப்பாவிடம் கேட்பது – என்ன ஏன் அப்பா காப்பாத்தின.
மூளையின் செயல்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்பால் தான் இந்த உலகில் வாழ தகுதியற்றவன் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. தானா இப்படி ஆகி விட்டேன் என அவனாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பரீட்சையில் பத்து மதிப்பெண்ணுக்கு ஏழு வாங்கிய போது அவன் மனம் உடைந்து மாடியிலிருந்து குதித்திருக்கிறான். ஏழு மதிப்பெண் வாங்கும் மாணவனா நான் என்று கேட்ட அவனுக்கான ஆறுதலை சமூகமோ குடும்பமோ காலமோ அவனுக்கு வழங்கவில்லை.
மெல்ல மெல்ல தனிமையின் கோட்டைக்குள் புகுந்தான் அவன். மக்களோடு பழகினால் தன் உண்மையான குறைபாடால் ஒதுக்கப்பட்டு கேலி செய்யப்படுவதை நினைத்து அவன் மெல்ல தனி உலகினுள் புகுந்தான். அவனது நண்பர்கள் அவனை கஜினி என்று அழைத்தார்கள்.

அவனது தங்கைக்கும் அவனுக்கும் சின்ன சின்னதாய் மோதல்கள் மனதளவில் வர ஆரம்பித்தன. அவன் அப்படி இருப்பதால் தன்னால் தன் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வர முடியவில்லையே என்று தங்கைக்கு ஆதங்கம். அவன் மேலிருக்கும் வெறுப்பு, இந்த மருத்துவ முறைமை மீதிருக்கும் வெறுப்பு இவை எல்லாவற்றையும் அவன் அப்பா, அம்மா, தங்கை மீது அறைக்கதவை பூட்டி விட்டு அடிப்பதில் காட்டுவான். அப்போதெல்லாம் அவன் அப்பா முன் கத்தியை நீட்டி- ஒன்று நீ என்னை கொலை செய்..அல்லது நான் உன்னைக் கொலை செய்வேன் என்று சொல்ல, மொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியும் சிதைகிறது.
பின் அதைத் தாங்க முடியாமல் குடும்பத்தினர் மன நல காப்பகத்திற்கு ஒரு முறை போன் செய்து அவனிடமிருந்து தப்பினர். அதன்பிறகு, இப்போது வரை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மன நல காப்பகத்தில் தான் இருக்கிறான். சமூகத்தின் மீது ஒரு கசிப்புணர்வும் காழ்ப்புணர்வும் அவனுள் அதிகரித்து உள்ளது.
ஆனாலும், இன்றும் மாடியிலிருந்து குதித்து விடுவேன் என்று சொல்வது அவனிடம் இருந்து கொண்டே இருக்கிறது. தொலைதொடர்பு சாதனங்கள் எதுவும் அவனிடம் கொடுக்காமல் இப்போது காப்பகத்தில் வைத்திருக்கிறார்கள். எனக்கு ரெண்டு கல்யாணம் செய்யணும்...எங்கப்பா மகாத்மா காந்திக்கு உறவினர் தெரியுமா என்று அவன் சொல்லும் வார்த்தைகள் தான் அவனது உளவியல் சிக்கலை சொல்கின்றன. மருந்துகள் வாயிலாக அவனது வன்முறை மனதை தணித்து மனதிற்கு ஆலோசனை மட்டுமல்ல, சில செயல்திறன் பயிற்சிகள் மூலமாகவும் அவனது கவனத்தை கூர்மைப்படுத்த முனைகிறார்கள்.
எல்லோருடைய மூளையையும் செயல்திறன் பயிற்சிகளால் இன்னும் கூர்மைப்படுத்த முடியும். விஜய் இன்றும் சிறு குழந்தை போல் சாலை கடக்க முடியாமல் இருக்கிறான். தனக்கு அப்பா ஒரு கம்ப்யூட்டர் செண்டர் வைத்துக் கொடுத்து அதன் முதலாளியாக இருக்க நினைகிறான். இரண்டு திருமணங்கள் செய்ய நினைக்கிறான். இதெல்லாம், அப்பா அவனை பார்க்க வரும் போதெல்லாம் கேட்கிறான். அவர் மறுத்ததால் அவன் கேட்பது – அப்பா எதுக்கு என்ன காப்பாத்தின ?

Dr. Sunil Kumar                                                               Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                                        Counseling Psychologist
Founder - Mind Zone                                                        co-founder, Mind zone

Manam yennum Mayyakkannadi - Article No. 4 (Tamil)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 4

மனநலம் பாதிப்படைந்தவர்களின் கதைகளைக் கேட்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகப் புலப்படுகிறது. அன்பையும் கவன ஈர்ப்பையும் அவர்கள் பெறவே பல நேரங்களில் அவர்கள் மனநோயாளியாகும் தருணங்கள் வாய்க்கின்றனவோ என நினைக்கிறேன். நான் சந்தித்த சொர்ணா என்னும் பெண் பேரழகு வாய்ந்தவளாக இருந்தாள். அவளது நீண்ட காலப் பிரச்னையாக வயிற்றுவலியும் மூக்கிலிருந்து ரத்தம் வருவதுமாக இருந்தது.
பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தபோதும் தீரவில்லை. கேஸ்ட்ரோ எண்ட்ராலஜி மருத்துவர் சொன்னது என்னவெனில்... குடல் அழற்சி நோயாக இருக்கும் வாய்ப்புள்ளது. ஆபரேஷன் செய்தும் வலி தீரவில்லை. அதற்குள்ளாகவே மருத்துவச் செலவு இரண்டு லட்சம் தாண்டி செலவாகி இருந்தது. அப்போதுதான் அவருக்கு ஏற்பட்டிருப்பது நிஜமான உடல் வலியல்ல. அது ஒரு மனரீதியிலான சிக்கல் ஏற்படுத்தும் நோய் என்று மருத்துவரே ஒரு மனநல ஆலோசகரைச் சென்று சந்திக்கப் பரிந்துரைக்கிறார்
மனநல ஆலோசகர்கள் அவளிடம் பேசும்போதுதான் வலிக்குப் பின்னால் இருந்த அவளது மன சிக்கல் புலப்பட்டது. அவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் அவள் அப்பா இறந்து போகிறார். அதுவரை மிக மகிழ்ச்சியான குடும்பமாக இருந்த குடும்பம் பெரிய பொருளாதாரப் பின்னடைவை எட்டுகிறது. இவள் ஒரே பெண். அம்மா ஹோட்டல் ஒன்றில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேலைக்கு சேர்கிறார். காலையில் ஏழு மணிக்கு வேலைக்குக் கிளம்பினார் என்றால் வீடு திரும்புவதற்கு எப்படியும் இரவு ஒன்பது மணியாகி விடும். பெரும்பான்மையான நேரங்கள் இவள் தனிமையிலேயே இருந்தாள்.

அவளது உடன் படிக்கும் மாணவர்களின் அப்பாக்கள் பள்ளிக்கூடம் வந்து விட்டுப் போகும்போதான வெறுமை அவளை மிகவும் பாதித்தது. கூடவே சக தோழிகளுக்கு நிகரான வீடு தனக்கில்லை. ஆடை வகைகள் இல்லை. மேக்கப் சாதனங்கள் இல்லை என்பதெல்லாம் அவள் ஆழ்மனதின் குறைபாடுகளாக பதிகின்றன. இக்காலகட்டத்தில் இவளின் தனிமையை பயன்படுத்தி நெருங்கிய உறவினர்களே இவளை தவறுதலாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இயல்பாகவே தந்தையை இழந்து அதனால் குடும்ப பிணைப்புக்கான இழை அறுந்து, வேலை நிமித்தம் அம்மாவும் அதிகமாக நேரம் ஒதுக்க முயலாதபோது அவளுக்குத் தேவைப்பட்ட அன்பை, ஆறுதலை தர முன்வந்தவர்களே இவர்கள். அம்மா வேலை முடிந்து ஒரு நாளின் இறுதியில் வந்தால் சோர்ந்து படுத்து விடுவாள். சில நேரம் அயர்வின் கோபம் அவளிடம் ஒட்டியிருக்கும். இவளது வெற்றிடத்தை பள்ளி ஆசிரியரிடம் பேச பேச அவர் ஆறுதலாக தொடங்கி பாலியல் வன்முறையில் முடித்து வைத்தார். ஐந்தாம் ஆறாம் வகுப்புகளுக்குள்ளாகவே பலர் அவளைப் பயன்படுத்தியிருந்தனர்.
அம்மா வேலை பார்க்கும் ஹோட்டலின் முதலாளி முதல் பள்ளிக்கூட ஆசிரியர் வரையிலுமே அவளிடம் பாலியல் அத்துமீறல்களை செய்திருக்கின்றனர். பிறகாக அவள் யாரிடமும் இதைப் பற்றி மனம்விட்டு தன் வலி வேதனையைப் பேச தயங்குகிறாள். மற்றவர்களும் தன்னிடம் தவறாக நடந்து கொள்வார்களோ என்ற அச்சம் அவளுள் இருக்கிறது.
ஒருபக்கம் தான் நேசித்தவர்கள் எப்போதுமே தன்னுடன் இருக்காத வாழ்க்கை. ஒன்று அவர்கள் விட்டுப் போய் விடுவார்கள். அல்லாது இறந்து போய் விடுவார்கள் அல்லது தன்னை பயன்படுத்தி விட்டு விலகி விடுவார்கள் என்ற எண்ணம். ஆனால், அதேநேரம் மனம் ஆறுதலை, அன்பை, அணைப்பின் கதகதப்பை நாடியே உள்ளது.
இந்த உள்மனப் பிரச்னை யாருக்குமே தெரியவில்லை. கண்ணுக்கு முன் அவள் பாதிக்கப்பட்டிருந்தது வயிற்று வலியாலும் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுதலாலும் மட்டுமே. அம்மா பயந்து எல்லா மருத்துவமனைகளுக்கும் இவளை அழைத்து செல்கிறாள். மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள். மருத்துவ சோதனைகள் என்று அம்மாவுடன் நேரம் செலவழிக்க ஆரம்பிக்கிறாள். இது அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட ஆறுதலைத் தருகிறது வயிற்று வலியும் மூக்கிலிருந்து ரத்தம் வடிவதும் அம்மாவின் குணாதிசயத்தை மாற்றியிருந்தது. எப்போதும் கோபப்படும் அம்மா இவளிடம் பாசமாக நடந்து கொண்டார். இவளுக்காக அம்மா அளவில்லாத பணம் செலவழித்தார். எப்போதும் இவளுடனே படுத்து நெற்றி வருடி விட ஆரம்பிக்கிறார். விடுமுறை எடுத்து இவளுடன் நேரம் செலவழித்தார். இவையெல்லாம் அவளிடம் ஓர் ஆறுதல் நிலையை ஏற்படுத்துகிறது.
இரண்டாம் நிலை லாபம் ஒன்றை இந்த உடல்நலக்கோளாறில் அவள் கண்டுபிடித்து விடுகிறாள். அது அவள் மனதுக்கு மிக தேவையாக இருக்கிறது. தனக்கு வேண்டியதை இந்த நோயை வைத்து தான் சாதித்தாள். இந்நோய்க்கு எவ்வளவு மாத்திரை கொடுத்தாலும் அறுவை சிகிச்சையே செய்தாலும் இது தீராது. ஏனெனில் அதன் நோக்கம் / உள்நோக்கம் இரண்டுமே வேறு வேறாக உள்ளன. இந்த வலி எல்லாமே அவளது உளவியல் சார்ந்த அசாதாரண வலியாக அடையாளப்படுத்தினர்.

ஆங்கிலத்தில் இதை psychogenic  pain என்று சொல்வார்கள். உடல் தன் மனதுக்கு ஒப்பாததை வலியின் மூலமாக வெளிக்காட்டுவது. பரீட்சை சமயம் சிலருக்குக் காய்ச்சல் வரும். தலைவலி வரும். இதைப் பரீட்சை செய்து பார்த்தோமானால் உடலளவில் எந்தவிதமான பிரச்னையும் இருக்காது.
மனதளவில் நாம் சில பிரச்னைகளை முன் வைக்கும்போது அதற்கு மரியாதை இல்லை. இச்சமூகத்தில் மனதுக்குப் பெரிய மரியாதை இல்லை. ஒரு குழந்தை இன்று பள்ளிக்கு செல்லவில்லை என்றால் அக்குழந்தையின் பெற்றோர் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அதே சமயம் அப்பெற்றோர் அக்குழந்தை நெஞ்சு வலி என்று சொல்லுமானால் அதற்காக துடிப்பார்கள். உடலுக்கு அதீத கவனம் கிடைப்பதால் மனதின் கவனஈர்ப்பை உடல்வழி மொழிபெயர்க்க ஆரம்பிக்கிறார்கள். சைக்கோ - சோமாடிக் வியாதியின் முக்கிய பண்பே இவ்விதமான அறிகுறிகள் தான்.
கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் இவை. கவன ஈர்ப்பு என்பது தவறான சொல் அல்ல. இதுபோன்ற மனம் சார்ந்த வியாதிகளுக்கு அறிகுறிகள் இருக்கும். பரீட்சைக் காரணமாகக் காய்ச்சல் என்றால் காய்ச்சலின் சூடு இருக்கும். ஆனால், காய்ச்சலுக்கான கிருமி தென்படாது. ஏதோ ஒன்று பிடிக்காததால் தலைவலி வரும். ஆனால், அந்த தலைவலி மாத்திரையால் தீராது.
இவளின் வயிற்று வலியே அவள் தான் கர்ப்பமாகி விடுவோமோ என்ற பயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். மூக்கை இவளே குத்தி ரத்தம் வருமளவுக்கு காயம் செய்துகொண்டிருக்கிறாள் என்று மனநல மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தொடர்ந்து வயிற்றுவலியால் அம்மாவின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் உடனே மூக்கைக் காயப்படுத்தி ரத்தம் வர செய்து கைக்குட்டையில் துடைத்து அம்மாவிடம் காட்டும்போது அம்மா பதறி விடுகிறார். அந்த இதமான கவனிப்பு அவளுக்குத் தேவைப்பட்டது.
மருத்துவமனைகளுக்குப் போவது, ஹோட்டல்களில் தங்குவது / சாப்பிடுவது எல்லாமே அவளுக்குச் சுகத்தையே தந்திருக்கிறது. இது போன்ற சமயங்களில் இவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கே முதலில் கவுன்சலிங் கொடுக்க வேண்டியிருக்கிறது. மனதுக்கும் உடலுக்குமான தொடர்பு, மனசு சரியில்லை என்றால் என்ன மாதிரியான மாயைகளுக்குள் உடல் சிக்கிக்கொள்கிறது என்பது பற்றியெல்லாம் உடனிருப்பவர்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.
அதேநேரம் சொர்ணா போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வழிகளின் வழி இந்த மன அழுத்தத்தைக் கையாளும் வழிமுறைகளைக் கற்று கொடுக்க வேண்டும். மனம்விட்டு பேசாமல் இருப்பதுதான் மிகப் பெரிய பிரச்னை. தன் அம்மாவுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று அவள் நினைத்ததை அவள் பேசவேயில்லை. அதேபோல் ஆண்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதையும் அம்மாவிடம் சொல்லவே இல்லை. இருவார மன ஆலோசனைக்குப் பிறகு இப்போது மீண்டு வருகிறாள் அவள். பாலியல் வன்முறைக்கு ஆளாகிறவர்களுக்கு வெட்கமும் அவமானமும் அதிகமாக ஆட்கொண்டிருக்கும். அதனால் வெளியே சொல்லாமலே அதை அடைத்து வைத்து தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வார்கள்.
ஆசிய நாடுகளின் உள்ளார்ந்த தத்துவமே அவமானத்தைத் திணித்தபடியே செயல்படுத்தும் அடக்குமுறை என நான் படித்திருக்கிறேன். அவமான உணர்வை அடக்கி தன்னுள் வைத்திருப்பதன் முக்கிய வெளிப்பாடு தன்னைத் தானே பாதிப்புக்குள்ளாக்கிக்கொள்வதே ஆகும்.
சரியான நபர்களிடம்தான் நமக்கு தேவைப்படும் அன்பை பெறுகிறோமா என்பதில் ஆரம்பிக்கிறது இதன் சூட்சமம். இதைப் புரியவைத்து மீட்டெடுப்பதே மிக முக்கியமான விஷயம். அவளின் அம்மாவுக்குப் பணம் போகவும் மனரீதியிலான நெருக்கத்தை மகளுடன் ஏற்படுத்திக் கொள்ளவும் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் அவர்கள் பார்வையை, வாழ்வை மாற்றியது.

Dr. Sunil Kumar                                                   Dr Jayasudha Kamaraj
Clinical Psychologist                                            Counseling Psychologist
Founder - Mind Zone                                            co-founder, Mind zone

Manam Yennum Mayyakkannadi - Article No.3 (Tamil)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 3

சண்முகம் இயல்பான ஆசைகள்கொண்ட மிக துறுதுறுப்பான இளைஞர். பொறியியல் படிப்பு முடிந்ததும் அவருக்கு மிக நல்ல வேலை ஒன்று ஐ.டி. கம்பெனியில் கிடைத்தது. அம்மா அப்பாவுக்கு அதில் ஏக சந்தோஷம். படிப்பு, வேலை என்பது போன்ற சமூகம் எதிர்பார்க்கும் சம்பவங்கள் நடைபெற்ற பிறகு சமூகம் எதிர்பார்க்கும் மற்றொரு கடமையான திருமணம் பற்றி சண்முகத்திடம் அம்மாவும் அப்பாவும் பேசினார்கள். காட்டிய ஒரு சில புகைப்படங்களில் பிடித்த படத்தில் சாரதா இருந்தாள். மிக மிக எளிமையான தோற்றம். கிராமம் சார்ந்த சாயல். சன்முகத்துக்கு அவள் கண்கள் மிகவும் பிடித்திருந்தது.
பெண் பார்க்கப் போனார்கள். சண்முகம் அவளிடம் தனியாக பேசினான். வெட்கத்துக்கு நடுவே அவள் சொன்ன சில வார்த்தைகள் நீண்ட வரிகளாக அவனுள் ஒலித்தபடி இருந்தது. பெரியவர்கள் திருமண நாளை சில காரணங்களுக்காக ஆறு மாதங்கள் கழித்து வைக்க, சண்முகம் சாரதாவிடம் போனில் பேச ஆரம்பித்தான். அவளது அன்பு அவனை வேறொரு உலகத்துக்குக் கூட்டிப் போனது.
ஒருநாள் சாரதா அவனை வீட்டுக்கு அழைத்தாள். அவனைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னாள். சண்முகம் பரவசமானான். ஆனால், இருவருக்கும் இச்சந்திப்பை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று பயம். தன் அம்மா அப்பா இல்லாத ஒரு நேரத்தை சாரதா சொல்கிறாள். அப்படி வரும்போது யாரும் வந்து விட்டால் என்ன செய்ய என்று கேட்கும்போது சாரதா ஒரு பதில் சொல்கிறாள்.
“எங்க வீட்ல ஒரு வழி இருக்கு... அது வழியா நீங்க போனா நேரா பின் தெரு வந்திடும். அப்படி போயிடலாம் நீங்க.”
அந்த பதில் அந்த நேரத்தில் அன்பின் பரவச ஊற்றில் தோய்ந்து வந்ததாகவே இருந்தது. அவன் ஒரு குறிப்பிட்ட நாளில் நண்பனைப் பார்க்க போவதாகச் சொல்லிச்
சென்று சாரதாவை சந்தித்தான். நாளைய மனைவியைத் தனியாய் சந்திக்கும்போதான உரிமை மீறல் இயல்பாக நடக்க சாரதாவும் அதற்கு பெரிய தடை சொல்லவில்லை. அவர்கள் எதிர்பார்த்தது போலவே யாரும் வரவில்லை. மிக மிக சந்தோஷமாக வீடு திரும்பினான் சண்முகம்.
காதலும் எதிர்காலம் குறித்த கனவிலும் சீக்கிரமாகவே நாள்கள் கழிந்தன. திருமணம் ஆன பின், அவர்கள் தனிக்குடித்தனம் சென்றார்கள். வீட்டில் அத்தனை பேரிடமும் அத்தனை பேரன்பாய் இருந்தாள் சாரதா. அன்றாட வாழ்வின் சிக்கலும் அன்பும் காதலும் குழந்தையுமாக வாழ்க்கை சக்கரம் ஓடியது. சண்முகத்துக்கு அலுவலகத்தில் பல பதவி உயர்வுகள் வந்தன. உலகின் மிகச் சிறப்பான மகிழ்ச்சியை தான் பெற்றுவிட்டதாகவே சாரதா நம்பினாள்.

சண்முகத்துக்கு அலுவலகத்தில் சுபாஷ் என்னும் நண்பன் உண்டு. அவனது திருமண நிச்சயத்துக்கு போய் வந்த சில நாள்களில் ஒரு தேநீர் இடைவெளியில் சுபாஷ் தனக்கு மனைவியாக வர போகிறவரை எப்படி சண்முகம், சாரதாவை வைத்திருக்கிற மாதிரி சந்தோஷமாக வைக்கலாம் என்று கேட்க, சண்முகமும் விட்டுக்கொடுப்பது, விடாமல் காதலிப்பது பற்றியெல்லாம் சொல்லிவிட்டு திருமணத்துக்கு முன் இந்தக் காலமெல்லாம் பேசி பழகுகிறார்கள். அது மிக நல்லது என்று சொல்கிறான்.
சுபாஷும் அதன்படி அந்த பெண்ணிடம் பேச ஆரம்பிக்கிறான். அடுத்து அவள் வீட்டுக்கு போகும் முயற்சியை கையிலெடுக்கிறான் சுபாஷ். ஆனால், அந்தப் பெண் அதற்குத் தயாராக இல்லை. இப்படிப்பட்ட மாப்பிள்ளை தனக்கு வேண்டாம் என்று கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்குப் போய் விட்டாள். பின் சண்முகம் தலையிட்டு சமரசம் செய்து வைத்தான். கல்யாணம் முடிந்தது ஒருவழியாக. ஆனால், சண்முகத்துக்குள் சந்தேகம் என்னும் கொடூர அரக்கன் வந்து சப்பணமிட்டுக்கொள்கிறான்.
சுபாஷின் மனைவி கணவனாக ஆகப்போ கும் ஓர் ஆணிடமே தனியாய் பேசவோ, ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவோ தயாராக இல்லாதபோது எப்படி சாரதா அவனை வர சொன்னாள்? அவனது முன்னேற்றங்களுக்கு ஒத்துழைத்தாள்? அம்மா அப்பா வந்தால் வீட்டின் இன்னொரு வழியாக எப்படி வெளியே போக சொன்னாள்? என்று யோசித்தான். அப்படியென்றால் சுபாஷின் மனைவிதான் பத்தினி என்று தீர்மானித்தான். மனம் என்னும் மாயக்கண்ணாடி உடைந்து அவனுக்கு பல பிம்பங்களைக் காட்ட அவன் எல்லா சில்லிலும் தன் முகத்தை பார்க்கிறான். இரண்டு வருடங்கள் கழித்து தன் சக எதிரியாக சாரதாவை நினைக்கிறான்.
சாரதா யார் யாரிடம், குறிப்பாக ஆண்களிடம் பேசுகிறாள் என்பதை ஒரு சிறு டைரியில் எழுதிவைத்து அதை அன்றிரவு வரை மாறி மாறி வாசித்தபடியே இருந்தான். பின் அவளை வீட்டில் பூட்டிவிட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தான். மனசுக்குள் சாரதா ஏற்கெனவே பல ஆண்களுடன் பழகியதால்தான் தன்னை வீட்டுக்கு வர சொல்லி தொட அனுமதித்திருக்கிறாள் என்று தீவிரமாக நம்ப ஆரம்பித்தான். திண்டுக்கல் சாரதி படத்தில் கருணாஸ் அரைநாள் விடுமுறை போட்டுவிட்டு வீட்டுக்கு வருவதுபோல், வந்து வீட்டின் சகல மூலைகளிலும் இல்லாத அந்த ஒருவனை தேடுவான். வெளியூர் போய் வருவதாகச் சொல்லிவிட்டு அவ்வப்போது பகலிலும், அடிக்கடி இரவிலும் வந்து வீட்டுக்கு வெளியே இருந்து சாரதாவைக் கண்காணிப்பான். சண்முகம் ஏன் மாறினான், அவனுக்கு என்ன பிரச்னை என்பதை சாரதா உணரும் முன்னமே பிரச்னைகள் அவளை மூழ்கடித்திருந்தது. அதுவே அதன் பெருந்துயர்.
சதா நேரம் சண்டை. சச்சரவு. ஒரு தடவை சாரதா பொறுக்க மாட்டாமல் கத்தியபோது அவன் அமைதியாக “எத்தன பேர வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கியோ” என்று சொல்ல அதிர்கிறாள் சாரதா. அவசரமாக வீடு மாற்றுகிறான். பிறகு வீடு மாற்றியபடியே இருக்கிறான். இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து போனால் பக்கவாட்டு கண்ணாடியில் சாரதாவைப் பார்த்தபடியே வருகிறான். அவள் காற்றிலேயே கையால் வரைந்து பின்னால் வருபவர்களுக்கு தனது அலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டதாக நம்பினான்.
பின்னே ஆரம்பித்தது குடிப்பழக்கம். ஒருகட்டம்
விளையாட்டாக குடிக்க ஆரம்பித்தவனை இன்னொரு உச்சகட்டத்தில் குடி அவனை விழுங்கியது. குழந்தையைக் குளிப்பாட்ட கால்களில் இருத்திக்கொள்ள சேலையை சாரதா தூக்கிக் கட்டினால்கூட வார்த்தைகள் அமிலத்தில் தோய்ந்து விழுந்தன. “எவனுக்கு கால காட்டிட்டு இருக்க?”

வார்த்தை வன்முறை கரையைக் கடக்க, அவள் அமிழ்ந்து போகிறாள். அவளைக் கண்காணிக்க அவன் அம்மாவை அழைத்து வருகிறான். அவன் வேலைக்குப் போன பிறகு வீட்டுக்கு யாரும் வந்துவிட கூடாதில்லையா? முதலில் தன் மருமகள்மீது சின்ன சந்தேகத்தோடு வந்த அவனது அம்மாவை அவன் இல்லாதபோது சாரதாவின் காதலர்கள் வர உதவி செய்கிறாள் என்று சந்தேகப்பட்டபோதே பிரச்னை தன் மகன்தான் என்று உணர்ந்தாள். இடையில் தாங்க முடியாத வேதனையோடு சாரதா தன் அம்மா வீட்டுக்குச் செல்ல, அங்கேயும் போய் பிரச்னை செய்கிறான் சண்முகம். அலுவலகத்துக்கு போவது குறைந்து, பின் போகாமலே ஆனான்.
ஒருகட்டத்தில் அப்பா, அம்மாவையே கத்தியால் குத்தியபோதுதான் அவர்கள் அவனை ஓர் அறைக்குள் பூட்டிவைத்து பின் மைண்ட் ஜோன் மனநல மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்தார்கள். பல மாத சிகிச்சை. மருந்தும் ஆலோசனையும் இன்றுவரை சண்முகத்துக்குத் தொடர்கிறது. இன்றும் அவனுடன் மருத்துவமனை வரும் சாரதா மருத்துவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்... ‘எப்படியாச்சும் குடிய மட்டும் விட்டுட்டார்ன்னா போதும் டாக்டர்.’

Dr. Sunil Kumar                                                         Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                                  Counseling Psychologist
Founder - Mind Zone                                                  co-founder, Mind Zone

Manam Yennum Mayyakkannadi - Article No.2 (Tamil)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 2

இன்றைய நவீன சூழலில் மனநோய் என்பது சந்தைப்படுத்தப்படுகிறதா என்னும் மிகப் பெரிய கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. மனநலம் பற்றி சமூகத்தால் உச்சரிக்கத் தயங்கும் வாழ்க்கையில், மனநலம் பற்றி உரக்க பேசுவதன் அவசியம் அதன் சிக்கல்களை எளிமையாக்கி அதன் மேல் படிந்திருக்கும் சமூகக் கூச்சத்தைத் துடைத்தெறிவதே ஆகும். சமூகம் கோட்பாடுகளாய் வைத்திருக்கும் அளவீடுகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் யதார்த்த வாழ்க்கை புகுத்தும் நவீன மாயத்திரைகளில் பலர் சிக்கித் தவிக்கின்றனர். இது எல்லா வயதினருக்குமான சிக்கலாக இருக்கிறது.
மின்னணு சாதனங்களால் நிரம்பிக் கிடக்கும் வாழ்க்கை இது. அலைபேசி கொடுத்துதான் குழந்தைகளை சாப்பிட வைக்கிறார்கள். அதிலிருக்கும் விளையாட்டுகளுக்குப் பெரியவர்களே அடிமையாகிறார்கள். ஒரு காலகட்டத்தில் அப்படியொரு விளையாட்டுக்கு நான் அடிமையாகி வாழ்வில் ஒரு விஷயம் நடக்க வேண்டுமென்றால் அந்த விளையாட்டில் அன்று நான் ஜெயிக்க வேண்டுமென்று நினைக்கும் அளவுக்குப் போதையானபோது நான் செய்த ஒன்றுதான் – அவ்விளையாட்டை என் அலைபேசியிலிருந்து நீக்கியது.
பதின்ம வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் மன, உடல்ரீதியிலான பாலியல் குழப்பங்களுக்கு இந்த மெய்நிகர் இணைய உலகம் விரல் பிடித்து கரடுமுரடான பாதைக்கு அழைத்து செல்கிறது. சவீதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஒரு பள்ளி மாணவி. அப்பா வெளியூரில் நல்ல வேலை பார்க்க, சென்னையில் அம்மாவுடன் வசித்து வருகிறாள். அம்மாவும் அரசாங்கத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சவீதாவுக்கு மிக நவீனமான விலை உயர்ந்த போனை வாங்கிக் கொடுக்கிறார்கள் பெற்றோர்.
சவீதாவுக்குத் தன் உடல் குறித்த தாழ்வு மனப்பான்மை உண்டு. தான் குண்டாக கறுப்பாக இருப்பதாக நினைப்பதாகவும் அதனாலேயே அழகற்றவராக மற்றவர்கள் விரும்பத்தகாத பெண்ணாகவும் இருப்பதாக நினைக்கிறாள். முகநூலில் ஒரு கணக்கை உருவாக்கி உடலமைப்பு தெரியாமல் பல கோணங்களில் கண், காது, மூக்கை புகைப்படம் எடுத்து பதிவிடுகிறாள். அதற்கு கிடைக்கும் விருப்பக்குறிகள் அவளுக்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றன. கீழே சிலர் அவளை வர்ணித்து இடும் கருத்துகள் அவள் மனதுக்கு இதமாக இருந்தன.
அவளது பள்ளியும் மிக வசதியானவர்கள் படிக்கும் பள்ளி. பல வெளுத்த தோல்களுக்கிடையே இவளது கறுத்த நிறத்தை கிண்டல் செய்தார்கள். இப்படியான காலகட்டங்களில் தொடர்ந்து முகநூல் கருத்துகளை வாசித்து வாசித்து தனது மனதை சந்தோஷப்படுத்திக் கொண்டாள் சவீதா. ஒருநாள் தற்செயலாக வீட்டு அலமாரியில் அவளைத் தத்தெடுத்தற்கான ஆவணங்களைப் பார்த்து மனமுடைந்து போகிறாள். அம்மாவிடம் மறைமுகமாக இது குறித்து பேசி காயப்படுத்துகிறாள்.

இப்போது, முகநூல் உள்டப்பில் தன்னிடம் பேசும் ஆண்களுக்கு தன் அலைபேசி எண்ணைக் கொடுக்கிறாள் அவள். அவர்களில் ஐந்து பேருக்கும் மேலே வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள். அவளது அடுக்குமனை குடியிருப்பில் இருக்கும் மனிதர்கள் இதை அவள் அம்மாவிடம் சொல்ல உடைந்தே போகிறார் அவர். அவள் அலைபேசியை வாங்கிப் பார்த்தால் பாய் ஃப்ரெண்ட் 1 என்று ஆரம்பித்து பாய் ஃப்ரெண்ட் 40 என குறிப்பிட்டு இருக்கிறாள். எல்லோருடனும் பள்ளிக்குப் போகாமல்கூட பேசிக் கொண்டிருக்கிறாள் சவீதா. அம்மா அலைபேசியை வாங்கி பீரோவில் வைக்க அவள் வன்முறையைக் கையில் எடுக்கிறாள். அம்மிக் கல்லை வைத்து பீரோவை உடைத்து அலைபேசியை எடுக்கப் பார்க்கிறாள்.
குழந்தையின்மையை ஈடு செய்ய தத்தெடுத்த குழந்தையை, பெற்ற குழந்தையை விடவும் நன்றாக வளர்க்க வேண்டுமென்று நினைத்து சவீதா கேட்டதை எல்லாமே வாங்கிக் கொடுத்த அம்மா உடைந்து போகிறார். மனநலக் காப்பகத்தின் உதவியை நாட அவர்கள் வந்து அவளைக் கூட்டிச் செல்கிறார்கள்.
முதல் பதினைந்து நாள்கள் மிக வன்முறையாக நடந்து கொண்டு தன்னைத் தானே கூட காயப்படுத்திக் கொண்டவளின் ஒரே கோரிக்கை அலைபேசி வேண்டும். மெல்ல மருத்துவர்கள் சுனில்குமார் மற்றும் ஜெயசுதா பேசும்போது அவள் தன்னை யாருமே அங்கீகரிக்காத ஏக்கத்தை பகிர்ந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே சவீதாவின் அம்மாவின் அம்மா சவீதாவைத் தத்தெடுப்பதை விரும்பாததினால் அவரை ஒருபோதும் தூக்கக் கூட செய்ததில்லை. அந்த நிராகரிப்பு தரும் வலி மெல்ல மெல்ல குழந்தைப் பருவத்திலிருந்தே வேர் விட்டிருக்கிறது. சவீதா எட்டு வயதில் இருக்கும்போது வீட்டுக்கு வந்த அம்மாவின் அக்கா மகன் அவளை பாலியியல் சீண்டலுக்கு ஆளாக்கியிருக்கிறான். அது பற்றி அம்மாவிடம் இவள் சொன்னபோதும் அம்மாவால் அதை வெளியே சொல்ல குடும்ப காரணங்களாலும், யாரும் விரும்பாமல் குழந்தையைத் தத்தெடுத்த காரணத்தை இப்போது பழி சொல்ல பயன்படுத்துவார்கள் என்பதாலும் அவரால் இயலவில்லை. ஒருவேளை அவனே அவளிடம் அவள் தத்தெடுத்தக் குழந்தை என்று சொல்லியிருக்கக் கூடுமென சவீதாவின் அம்மா நம்பினார்.
“நம் மூளையில் ரிவார்ட் சர்க்கியூட் என்னும் ஒரு பகுதி உண்டு. அது பாராட்டுகளால் தூண்டப்படும். அது ஓர் உற்சாகத்தைக் கொடுக்கும். அதை சவீதா முகநூல் கருத்துகளால் திருப்தி செய்கிறாள். நம்மில் சிலர் காபியால், இசையால், முகநூல் புகைப்படத்தால் அதை திருப்திப்படுத்துகிறோம்” என்கிறார்கள் மருத்துவர்கள் சுனில்குமார் மற்றும் ஜெயசுதா.
சவீதாவுக்கான சிகிச்சை மிக முக்கியமாக அலைபேசியிலிருந்து அவரை தூரம் வைக்கும் முயற்சியாகவே இருந்தது. மேலும், அவரின் தாழ்வு மனப்பான்மையை நீர்த்துப்போக செய்யும் தன்னம்பிக்கை சார்ந்த முறைமை பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. மெல்ல தான் செய்தது தவறென அவர் நினைக்க ஆரம்பித்தார். எங்களுக்கு முன்னமே அவர்கள் இருவருமே ஒளிவு மறைவு இல்லாமல் தத்தெடுத்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு செய்தோம். அது அவர்கள் உறவை இலகுவாக்கிற்று.
இந்த சமூகம் வைத்திருக்கும் சில நியதிகளை தங்கள் வாழ்வு தராசில் பலர் நிறுத்துவதேயில்லை. குழந்தையில்லை என்பதை ஒரு குற்றமாக இந்த சமூகம் பார்க்கும் கண்ணோட்டமே ஒரு மனநோய் தான். குழந்தையைத் தத்தெடுக்கும் முன்னமே ஏன் தத்தெடுக்க நினைக்கிறோம் என்பது பற்றிய ஒருமனோதத்துவ ஆலோசனை அவசியம் தேவை. தன்னை சிறந்த தாயாக நினைக்க வைக்க சவீதாவின் தாய் முனைய, அந்தப் பாசத்தைக்கொண்டே உணர்வு ரீதியான சுரண்டலைக் கச்சிதமாக செய்திருக்கிறார் சவீதா.
குழந்தைகள் கையில் இணையதளத்தை பரவலாக கொடுப்பது மிகத் தவறான விஷயம். அதை பல பெற்றோர்கள் இன்று தங்களை அறியாமல் செய்து வருகிறார்கள். இளவயதில் மூளை மிக லேசாக ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டு விடும். சவீதாவின் அம்மா அறியாமல் பாசம் காட்டுவதாக நினைத்த விஷயம் சவீதாவின் வாழ்வையையே திசை மாற்றி விட்டது.
மனம் பற்றி படரும் உணர்வுக் கொடிதான். நவீன சிக்கல்களின் முழுசேதாரமும் இயந்திர உலகின் மூலமான மெய்நிகர் உறவினால்தான். அன்பும் பகிர்தலுமே மனதையும் மனித வாழ்வையும் உயிர்ப்பிக்க வைக்கிறது என்பதை புரிந்துகொண்டாலே விடுதலை நம் வசமே.

Dr. Sunil Kumar                                                           Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                                    Counseling Psychologist
Founder - Mind Zone                                                   Co-founder, Mind Zone

Tuesday 24 October 2017

Manam Yennum Mayakkannadi - Article No. 1 (Tamil)

குடிப்பழக்கம், தற்கொலை எண்ணங்கள், அதித பயம், இனம்புரியாத கவலை, கோபம், பதற்றம், வாட்ஸ்அப் ஃபேஸ்புக் அடிக்ஷன் என மனம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது ‘மைண்ட் ஜோன்’ மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் சுனில்குமார் மற்றும் மனநல மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் ‘மனம் எனும் மாயக்கண்ணாடி’யை நமக்குக் காட்டப் போகிறார்கள்.
சண்முகத்தின் சொந்த ஊர் விழுப்புரம் பக்கம் ஒரு குக்கிராமம். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடனே படித்தான். கல்லூரியின் கடைசி ஆண்டு நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையின் மிக முக்கியமான ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். வழக்கமான தமிழ் சினிமா பாணியில் இங்கு படம் நிறைவு பெற வேண்டும். ஆனால், இங்குதான் ஆரம்பித்தது.
முதல் மாதம் மிக அற்புதமான காலகட்டம். மனதில் தெரிந்ததெல்லாமே அந்த பல இலக்க சம்பளமும் ஊரில் அம்மா அப்பாவின் கவுரவமான மகிழ்ச்சியும் மட்டுமே. பிறகு அலுவலகத்தில் முதல் ப்ரெசன்டேஷன் வருகிறது. சண்முகத்துக்குப் பதற்றமும் அதிகரிக்கிறது. அதை மட்டுப்படுத்திக்கொண்டு அவன் எல்லோர் முன்பும் ப்ரெசன்ட் செய்ய அவனது ஆங்கிலப் பரிச்சியமின்மை அவனைத் தடுமாறச் செய்கிறது. எல்லோர் முன்பும் வியர்த்துப்போய் நிற்க, அவனது அணித் தலைவர் கண்ணாடி அறையினுள் அழைத்து சென்று , ‘தம்பி... முதல் முயற்சி... உன் தடுமாற்றம் புரிகிறது. ஆனால், அடுத்த வாரம் மீண்டும் ஒரு ப்ரெசன்டேஷன் உள்ளது. அதை நீங்கள் மிக சரியாக ப்ரெசன்ட் செய்ய வேண்டும். மும்பையிலிருந்து கம்பெனி சி.ஈ.ஓ. வருகிறார்’ என்று சொல்கிறார்.

மறுவாரம். சண்முகம் பெருமுயற்சி செய்தும் அவனால் நினைத்தது போல் ப்ரெசன்ட் செய்ய முடியவில்லை. மஞ்சப்பை, ட்ரங்குப் பெட்டி என்று கிண்டலும் அவமானமும் அவனைத் துரத்தி அடித்தன. தனியாக யோசிக்கும்போது இந்த வேலை தனக்கானது தானா என்ற பயம் வந்தது. ஆனால், அது இல்லாவிட்டால் ஏற்படும் பொருளாதார இழப்பும் அம்மா அப்பாவின் கனவு தகர்ந்து போகும் வாய்ப்பும், கனவுகள் மெய்ப்பிக்கப்படாமல் போகும் வலியும் அதீதமானது.
நண்பரின் ஆலோசனைப்படி அவர் ஒரு மனநல வைத்தியரைப் பார்த்து இந்தச் சங்கடத்தை மீட்டெடுப்பது பற்றி கேட்க அவர் ஒரு மாத்திரையைக் கொடுத்திருக்கிறார். அதை அடுத்த ப்ரெசன்டேஷனுக்கு முன்னே அவன் சாப்பிட ஓரளவு தைரியமாய் பேச முடிந்திருக்கிறது.
அப்படி ஆரம்பித்த வழக்கம்தான். இன்று ஒரு நாளைக்கு பதினைந்து மாத்திரைகள் சாப்பிடும் நிலையில் அவர் இருக்கிறார். மனம் பதற்றமாக இருக்கும்போதெல்லாம் சாப்பிடத் தோன்றி, காதலைச் சொல்லக்கூட மாத்திரையைச் சாப்பிட்ட பிறகே சொல்ல முடிந்திருக்கிறது.
இந்த நவீன உலகம் ஒருபுறம் திறமை என்று நிர்ணயித்த கோட்பாடுகளை அளவீடாகக்கொண்டு தனித்திறனை நாம் மதிப்பீடுகளை உருவாக்குகிறோம். அதுதான் நம் பொருளாதாரத்தை, நாம் பணிபுரியும் இடங்களில் தீர்மானிக்கிறது. அது மறைமுகமாகத் தரும் அழுத்தத்தை நாம் உணர்வதே இல்லை. உணர்ந்தாலும் புறந்தள்ள நிர்பந்திக்கிறது புற சமூகம். அக சமூகமோ அதனாலேயே அதை ஒப்புக்கொள்ள யோசிக்கிறது.

இத்தகைய பணியிட மன அழுத்தங்கள் நம்மில் பலருக்கு உண்டு. எல்லோருக்கும் பொதுவான ஒன்றாகவே அதுவும் இந்தக் காற்று, நதியைப் போல ஆகிவிட்டது. ஸ்ட்ரெஸ் என்பது புழக்கத்தில் இருக்கும் சாதாரண வார்த்தையாகி, பரவி, இப்போது டிப்ரஷன் என்பது சகஜமான வார்த்தையாகி விட்டது. அதேநேரம் அது போகும் போக்கில் சொல்லி விட்டுப்போன வார்த்தையாக மாறி விட்டது.
உடலுக்குச் சுகமில்லாதபோது சிகிச்சைகள் எடுப்பதுபோல மனதுக்கு சுகமில்லாதபோது சிகிச்சை நிச்சயம் தேவை. இன்று அக்டோபர் 10 உலக மனநல நாளாக கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இதைக் கொண்டு இந்த ஆண்டை பணியிடத்து மன அழுத்தங்களை நீக்கும் முயற்சியை மேற்கொள்கிறது. எனவே, வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்தந்த நிறுவனங்களுக்கு இருக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் எல்லா நிறுவனங்களும் தங்கள் பணியாளர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்று கவலைப்படுகிறதா?
நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் எல்லா நிறுவனங்களுக்கும் மிக முக்கிய தேவை, தனது பொருளாதார முன்னேற்றமாக இருப்பதையே நாமும் மறைமுகமாக அறிந்திருக்கிறோம். ஆனால், உலகப் பொருளாதார மன்றம் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவரப்படி பணியாளர்களின் மன ஆரோக்கியமின்மை நிறுவனத்தின் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்றும் அதை சரி செய்ய நிறுவனங்கள் ஒரு சதவிகிதம் பணம் செலவழித்து பணியாளர்களுக்கு மனநல ஆலோசனையைக் கொடுத்தால் தனது பொருளாதார இழப்பை சரி செய்வதோடு அதேபோல் நான்கு சதவிகித லாபத்தையும் ஈட்ட இயலுமெனவும் வழி சொல்கிறது.

ஆனால், நிஜத்தில் அப்படி மனநலம் பாதிக்கப்பட்ட பணியாளரை எப்படி நம் நிறுவனங்கள் நடத்துகின்றன என்பதற்கு ஆஷிஷின் கதையே உதாரணம். ஆஷிஷ் அழகான இளைஞன். ஆனால், அவனும் பணியிடத்து அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாதம் அனுமதிக்கப்படுகிறான். பின்னால் விடுமுறை காரணமாக மனநல மருத்துவமனை தந்த விடுமுறை சீட்டை கொடுக்கும்போது நிர்வாகம் அதிர்கிறது. மீண்டும் போய் அதே மனநல மருத்துவரிடம் போய் தான் பணி செய்ய ஏற்ற நிலையில்தான் இருப்பதாக எழுதி வாங்கி வர சொல்கிறது. கூடவே இரு சட்ட திட்டங்கள். ஒன்று, அவன் அந்த அலுவலகக் கட்டடத்திலிருந்து குதிக்க மாட்டான் என்ற உறுதிமொழி. மற்றொன்று அவன் யாரையும் கொலை செய்துவிட மாட்டான் என்ற உத்திரவாதம். இதை எந்த மருத்துவரால் கொடுக்க இயலும்?
இப்படி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறதென தெரியும்போது ஒரு நிறுவனம் அந்த ஊழியரை கொலை செய்யக்கூடியவராக பார்ப்பதே மனித உரிமை மீறல். அலுவலகப் பாதுகாப்பு என்பது பணியாளர்களின் மகிழ்ச்சியை மீறி இருக்கும்பட்சத்தில் அங்குள்ள ஊழியர்கள் வெறும் மெஷினாகவே பாவிக்கப்படுவார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஓர் ஊழியரால் ஒருபோதும் கூர்ந்து வேலை செய்ய இயலாது. எல்லோருடனும் குழுவாகச் சேர்ந்து பணியாற்ற இயலாது. அடிக்கடி விடுமுறை எடுப்பார்கள். பணி தேங்கும். இங்குள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் இருக்கும் மனிதவளத் துறை என்பது சம்பள உயர்வை மட்டும் கவனிக்கும் துறையாகவே உள்ளது. தனிப்பட்ட பணியாளர்களின் பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்கப்படுவதேயில்லை.
இன்றைய நவீன உலகம் காதற்ற ஓர் இயந்திரம். இந்த மனநல நாளில் இதற்கு குறிப்பாக அலுவலகம் சார்ந்த சமூகத்துக்குக் காதுகளைப் பொருத்தி பகிர்தலைத் தூண்டி அதன் மூலம் ஒரு சமூகம் மனமகிழ்ச்சியை அனுபவிக்க உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் தொடர் ‘மனம் என்னும் மாயக்கண்ணாடி’யில் தங்கள் பிம்பங்களைச் சிதைத்துக் கொண்டவர்களின், சிதைந்ததாய் கருதி பார்ப்பவர்களின் வாக்குமூலமாக இருக்கப்போகிறது.

Dr. Sunil Kumar                                                              Dr. Jayasudha Kamaraj
Clinical psychologist                                                       counselling psychologist
Founder - Mind Zone                                                       co-founder, Mind Zone

psychology article in tamil part 1

மனம் என்னும் மாயக்கண்ணாடி!

டாக்டர் சுனில்குமார் - டாக்டர் ஜெயசுதா காமராஜ்
குடிப்பழக்கம், தற்கொலை எண்ணங்கள், அதித பயம், இனம்புரியாத கவலை, கோபம், பதற்றம், வாட்ஸ்அப் ஃபேஸ்புக் அடிக்ஷன் என மனம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது ‘மைண்ட் ஜோன்’ மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் சுனில்குமார் மற்றும் மனநல மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் ‘மனம் எனும் மாயக்கண்ணாடி’யை நமக்குக் காட்டப் போகிறார்கள்.
சண்முகத்தின் சொந்த ஊர் விழுப்புரம் பக்கம் ஒரு குக்கிராமம். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடனே படித்தான். கல்லூரியின் கடைசி ஆண்டு நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையின் மிக முக்கியமான ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். வழக்கமான தமிழ் சினிமா பாணியில் இங்கு படம் நிறைவு பெற வேண்டும். ஆனால், இங்குதான் ஆரம்பித்தது.
முதல் மாதம் மிக அற்புதமான காலகட்டம். மனதில் தெரிந்ததெல்லாமே அந்த பல இலக்க சம்பளமும் ஊரில் அம்மா அப்பாவின் கவுரவமான மகிழ்ச்சியும் மட்டுமே. பிறகு அலுவலகத்தில் முதல் ப்ரெசன்டேஷன் வருகிறது. சண்முகத்துக்குப் பதற்றமும் அதிகரிக்கிறது. அதை மட்டுப்படுத்திக்கொண்டு அவன் எல்லோர் முன்பும் ப்ரெசன்ட் செய்ய அவனது ஆங்கிலப் பரிச்சியமின்மை அவனைத் தடுமாறச் செய்கிறது. எல்லோர் முன்பும் வியர்த்துப்போய் நிற்க, அவனது அணித் தலைவர் கண்ணாடி அறையினுள் அழைத்து சென்று , ‘தம்பி... முதல் முயற்சி... உன் தடுமாற்றம் புரிகிறது. ஆனால், அடுத்த வாரம் மீண்டும் ஒரு ப்ரெசன்டேஷன் உள்ளது. அதை நீங்கள் மிக சரியாக ப்ரெசன்ட் செய்ய வேண்டும். மும்பையிலிருந்து கம்பெனி சி.ஈ.ஓ. வருகிறார்’ என்று சொல்கிறார்.
மறுவாரம். சண்முகம் பெருமுயற்சி செய்தும் அவனால் நினைத்தது போல் ப்ரெசன்ட் செய்ய முடியவில்லை. மஞ்சப்பை, ட்ரங்குப் பெட்டி என்று கிண்டலும் அவமானமும் அவனைத் துரத்தி அடித்தன. தனியாக யோசிக்கும்போது இந்த வேலை தனக்கானது தானா என்ற பயம் வந்தது. ஆனால், அது இல்லாவிட்டால் ஏற்படும் பொருளாதார இழப்பும் அம்மா அப்பாவின் கனவு தகர்ந்து போகும் வாய்ப்பும், கனவுகள் மெய்ப்பிக்கப்படாமல் போகும் வலியும் அதீதமானது.
நண்பரின் ஆலோசனைப்படி அவர் ஒரு மனநல வைத்தியரைப் பார்த்து இந்தச் சங்கடத்தை மீட்டெடுப்பது பற்றி கேட்க அவர் ஒரு மாத்திரையைக் கொடுத்திருக்கிறார். அதை அடுத்த ப்ரெசன்டேஷனுக்கு முன்னே அவன் சாப்பிட ஓரளவு தைரியமாய் பேச முடிந்திருக்கிறது.
அப்படி ஆரம்பித்த வழக்கம்தான். இன்று ஒரு நாளைக்கு பதினைந்து மாத்திரைகள் சாப்பிடும் நிலையில் அவர் இருக்கிறார். மனம் பதற்றமாக இருக்கும்போதெல்லாம் சாப்பிடத் தோன்றி, காதலைச் சொல்லக்கூட மாத்திரையைச் சாப்பிட்ட பிறகே சொல்ல முடிந்திருக்கிறது.
இந்த நவீன உலகம் ஒருபுறம் திறமை என்று நிர்ணயித்த கோட்பாடுகளை அளவீடாகக்கொண்டு தனித்திறனை நாம் மதிப்பீடுகளை உருவாக்குகிறோம். அதுதான் நம் பொருளாதாரத்தை, நாம் பணிபுரியும் இடங்களில் தீர்மானிக்கிறது. அது மறைமுகமாகத் தரும் அழுத்தத்தை நாம் உணர்வதே இல்லை. உணர்ந்தாலும் புறந்தள்ள நிர்பந்திக்கிறது புற சமூகம். அக சமூகமோ அதனாலேயே அதை ஒப்புக்கொள்ள யோசிக்கிறது.
இத்தகைய பணியிட மன அழுத்தங்கள் நம்மில் பலருக்கு உண்டு. எல்லோருக்கும் பொதுவான ஒன்றாகவே அதுவும் இந்தக் காற்று, நதியைப் போல ஆகிவிட்டது. ஸ்ட்ரெஸ் என்பது புழக்கத்தில் இருக்கும் சாதாரண வார்த்தையாகி, பரவி, இப்போது டிப்ரஷன் என்பது சகஜமான வார்த்தையாகி விட்டது. அதேநேரம் அது போகும் போக்கில் சொல்லி விட்டுப்போன வார்த்தையாக மாறி விட்டது.
உடலுக்குச் சுகமில்லாதபோது சிகிச்சைகள் எடுப்பதுபோல மனதுக்கு சுகமில்லாதபோது சிகிச்சை நிச்சயம் தேவை. இன்று அக்டோபர் 10 உலக மனநல நாளாக கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இதைக் கொண்டு இந்த ஆண்டை பணியிடத்து மன அழுத்தங்களை நீக்கும் முயற்சியை மேற்கொள்கிறது. எனவே, வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்தந்த நிறுவனங்களுக்கு இருக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் எல்லா நிறுவனங்களும் தங்கள் பணியாளர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்று கவலைப்படுகிறதா?
நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் எல்லா நிறுவனங்களுக்கும் மிக முக்கிய தேவை, தனது பொருளாதார முன்னேற்றமாக இருப்பதையே நாமும் மறைமுகமாக அறிந்திருக்கிறோம். ஆனால், உலகப் பொருளாதார மன்றம் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவரப்படி பணியாளர்களின் மன ஆரோக்கியமின்மை நிறுவனத்தின் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்றும் அதை சரி செய்ய நிறுவனங்கள் ஒரு சதவிகிதம் பணம் செலவழித்து பணியாளர்களுக்கு மனநல ஆலோசனையைக் கொடுத்தால் தனது பொருளாதார இழப்பை சரி செய்வதோடு அதேபோல் நான்கு சதவிகித லாபத்தையும் ஈட்ட இயலுமெனவும் வழி சொல்கிறது.
ஆனால், நிஜத்தில் அப்படி மனநலம் பாதிக்கப்பட்ட பணியாளரை எப்படி நம் நிறுவனங்கள் நடத்துகின்றன என்பதற்கு ஆஷிஷின் கதையே உதாரணம். ஆஷிஷ் அழகான இளைஞன். ஆனால், அவனும் பணியிடத்து அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாதம் அனுமதிக்கப்படுகிறான். பின்னால் விடுமுறை காரணமாக மனநல மருத்துவமனை தந்த விடுமுறை சீட்டை கொடுக்கும்போது நிர்வாகம் அதிர்கிறது. மீண்டும் போய் அதே மனநல மருத்துவரிடம் போய் தான் பணி செய்ய ஏற்ற நிலையில்தான் இருப்பதாக எழுதி வாங்கி வர சொல்கிறது. கூடவே இரு சட்ட திட்டங்கள். ஒன்று, அவன் அந்த அலுவலகக் கட்டடத்திலிருந்து குதிக்க மாட்டான் என்ற உறுதிமொழி. மற்றொன்று அவன் யாரையும் கொலை செய்துவிட மாட்டான் என்ற உத்திரவாதம். இதை எந்த மருத்துவரால் கொடுக்க இயலும்?
இப்படி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறதென தெரியும்போது ஒரு நிறுவனம் அந்த ஊழியரை கொலை செய்யக்கூடியவராக பார்ப்பதே மனித உரிமை மீறல். அலுவலகப் பாதுகாப்பு என்பது பணியாளர்களின் மகிழ்ச்சியை மீறி இருக்கும்பட்சத்தில் அங்குள்ள ஊழியர்கள் வெறும் மெஷினாகவே பாவிக்கப்படுவார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஓர் ஊழியரால் ஒருபோதும் கூர்ந்து வேலை செய்ய இயலாது. எல்லோருடனும் குழுவாகச் சேர்ந்து பணியாற்ற இயலாது. அடிக்கடி விடுமுறை எடுப்பார்கள். பணி தேங்கும். இங்குள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் இருக்கும் மனிதவளத் துறை என்பது சம்பள உயர்வை மட்டும் கவனிக்கும் துறையாகவே உள்ளது. தனிப்பட்ட பணியாளர்களின் பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்கப்படுவதேயில்லை.
இன்றைய நவீன உலகம் காதற்ற ஓர் இயந்திரம். இந்த மனநல நாளில் இதற்கு குறிப்பாக அலுவலகம் சார்ந்த சமூகத்துக்குக் காதுகளைப் பொருத்தி பகிர்தலைத் தூண்டி அதன் மூலம் ஒரு சமூகம் மனமகிழ்ச்சியை அனுபவிக்க உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் தொடர் ‘மனம் என்னும் மாயக்கண்ணாடி’யில் தங்கள் பிம்பங்களைச் சிதைத்துக் கொண்டவர்களின், சிதைந்ததாய் கருதி பார்ப்பவர்களின் வாக்குமூலமாக இருக்கப்போகிறது.

psychology articles in tamil

http://minnambalam.com/k/1508178629
மனம் என்னும் மாயக்கண்ணாடி - 2

இன்றைய நவீன சூழலில் மனநோய் என்பது சந்தைப்படுத்தப்படுகிறதா என்னும் மிகப் பெரிய கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. மனநலம் பற்றி சமூகத்தால் உச்சரிக்கத் தயங்கும் வாழ்க்கையில், மனநலம் பற்றி உரக்க பேசுவதன் அவசியம் அதன் சிக்கல்களை எளிமையாக்கி அதன் மேல் படிந்திருக்கும் சமூகக் கூச்சத்தைத் துடைத்தெறிவதே ஆகும். சமூகம் கோட்பாடுகளாய் வைத்திருக்கும் அளவீடுகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் யதார்த்த வாழ்க்கை புகுத்தும் நவீன மாயத்திரைகளில் பலர் சிக்கித் தவிக்கின்றனர். இது எல்லா வயதினருக்குமான சிக்கலாக இருக்கிறது.
மின்னணு சாதனங்களால் நிரம்பிக் கிடக்கும் வாழ்க்கை இது. அலைபேசி கொடுத்துதான் குழந்தைகளை சாப்பிட வைக்கிறார்கள். அதிலிருக்கும் விளையாட்டுகளுக்குப் பெரியவர்களே அடிமையாகிறார்கள். ஒரு காலகட்டத்தில் அப்படியொரு விளையாட்டுக்கு நான் அடிமையாகி வாழ்வில் ஒரு விஷயம் நடக்க வேண்டுமென்றால் அந்த விளையாட்டில் அன்று நான் ஜெயிக்க வேண்டுமென்று நினைக்கும் அளவுக்குப் போதையானபோது நான் செய்த ஒன்றுதான் – அவ்விளையாட்டை என் அலைபேசியிலிருந்து நீக்கியது.
பதின்ம வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் மன, உடல்ரீதியிலான பாலியல் குழப்பங்களுக்கு இந்த மெய்நிகர் இணைய உலகம் விரல் பிடித்து கரடுமுரடான பாதைக்கு அழைத்து செல்கிறது. சவீதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஒரு பள்ளி மாணவி. அப்பா வெளியூரில் நல்ல வேலை பார்க்க, சென்னையில் அம்மாவுடன் வசித்து வருகிறாள். அம்மாவும் அரசாங்கத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சவீதாவுக்கு மிக நவீனமான விலை உயர்ந்த போனை வாங்கிக் கொடுக்கிறார்கள் பெற்றோர்.
சவீதாவுக்குத் தன் உடல் குறித்த தாழ்வு மனப்பான்மை உண்டு. தான் குண்டாக கறுப்பாக இருப்பதாக நினைப்பதாகவும் அதனாலேயே அழகற்றவராக மற்றவர்கள் விரும்பத்தகாத பெண்ணாகவும் இருப்பதாக நினைக்கிறாள். முகநூலில் ஒரு கணக்கை உருவாக்கி உடலமைப்பு தெரியாமல் பல கோணங்களில் கண், காது, மூக்கை புகைப்படம் எடுத்து பதிவிடுகிறாள். அதற்கு கிடைக்கும் விருப்பக்குறிகள் அவளுக்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றன. கீழே சிலர் அவளை வர்ணித்து இடும் கருத்துகள் அவள் மனதுக்கு இதமாக இருந்தன.
அவளது பள்ளியும் மிக வசதியானவர்கள் படிக்கும் பள்ளி. பல வெளுத்த தோல்களுக்கிடையே இவளது கறுத்த நிறத்தை கிண்டல் செய்தார்கள். இப்படியான காலகட்டங்களில் தொடர்ந்து முகநூல் கருத்துகளை வாசித்து வாசித்து தனது மனதை சந்தோஷப்படுத்திக் கொண்டாள் சவீதா. ஒருநாள் தற்செயலாக வீட்டு அலமாரியில் அவளைத் தத்தெடுத்தற்கான ஆவணங்களைப் பார்த்து மனமுடைந்து போகிறாள். அம்மாவிடம் மறைமுகமாக இது குறித்து பேசி காயப்படுத்துகிறாள்.

இப்போது, முகநூல் உள்டப்பில் தன்னிடம் பேசும் ஆண்களுக்கு தன் அலைபேசி எண்ணைக் கொடுக்கிறாள் அவள். அவர்களில் ஐந்து பேருக்கும் மேலே வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள். அவளது அடுக்குமனை குடியிருப்பில் இருக்கும் மனிதர்கள் இதை அவள் அம்மாவிடம் சொல்ல உடைந்தே போகிறார் அவர். அவள் அலைபேசியை வாங்கிப் பார்த்தால் பாய் ஃப்ரெண்ட் 1 என்று ஆரம்பித்து பாய் ஃப்ரெண்ட் 40 என குறிப்பிட்டு இருக்கிறாள். எல்லோருடனும் பள்ளிக்குப் போகாமல்கூட பேசிக் கொண்டிருக்கிறாள் சவீதா. அம்மா அலைபேசியை வாங்கி பீரோவில் வைக்க அவள் வன்முறையைக் கையில் எடுக்கிறாள். அம்மிக் கல்லை வைத்து பீரோவை உடைத்து அலைபேசியை எடுக்கப் பார்க்கிறாள்.
குழந்தையின்மையை ஈடு செய்ய தத்தெடுத்த குழந்தையை, பெற்ற குழந்தையை விடவும் நன்றாக வளர்க்க வேண்டுமென்று நினைத்து சவீதா கேட்டதை எல்லாமே வாங்கிக் கொடுத்த அம்மா உடைந்து போகிறார். மனநலக் காப்பகத்தின் உதவியை நாட அவர்கள் வந்து அவளைக் கூட்டிச் செல்கிறார்கள்.
முதல் பதினைந்து நாள்கள் மிக வன்முறையாக நடந்து கொண்டு தன்னைத் தானே கூட காயப்படுத்திக் கொண்டவளின் ஒரே கோரிக்கை அலைபேசி வேண்டும். மெல்ல மருத்துவர்கள் சுனில்குமார் மற்றும் ஜெயசுதா பேசும்போது அவள் தன்னை யாருமே அங்கீகரிக்காத ஏக்கத்தை பகிர்ந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே சவீதாவின் அம்மாவின் அம்மா சவீதாவைத் தத்தெடுப்பதை விரும்பாததினால் அவரை ஒருபோதும் தூக்கக் கூட செய்ததில்லை. அந்த நிராகரிப்பு தரும் வலி மெல்ல மெல்ல குழந்தைப் பருவத்திலிருந்தே வேர் விட்டிருக்கிறது. சவீதா எட்டு வயதில் இருக்கும்போது வீட்டுக்கு வந்த அம்மாவின் அக்கா மகன் அவளை பாலியியல் சீண்டலுக்கு ஆளாக்கியிருக்கிறான். அது பற்றி அம்மாவிடம் இவள் சொன்னபோதும் அம்மாவால் அதை வெளியே சொல்ல குடும்ப காரணங்களாலும், யாரும் விரும்பாமல் குழந்தையைத் தத்தெடுத்த காரணத்தை இப்போது பழி சொல்ல பயன்படுத்துவார்கள் என்பதாலும் அவரால் இயலவில்லை. ஒருவேளை அவனே அவளிடம் அவள் தத்தெடுத்தக் குழந்தை என்று சொல்லியிருக்கக் கூடுமென சவீதாவின் அம்மா நம்பினார்.
“நம் மூளையில் ரிவார்ட் சர்க்கியூட் என்னும் ஒரு பகுதி உண்டு. அது பாராட்டுகளால் தூண்டப்படும். அது ஓர் உற்சாகத்தைக் கொடுக்கும். அதை சவீதா முகநூல் கருத்துகளால் திருப்தி செய்கிறாள். நம்மில் சிலர் காபியால், இசையால், முகநூல் புகைப்படத்தால் அதை திருப்திப்படுத்துகிறோம்” என்கிறார்கள் மருத்துவர்கள் சுனில்குமார் மற்றும் ஜெயசுதா.
சவீதாவுக்கான சிகிச்சை மிக முக்கியமாக அலைபேசியிலிருந்து அவரை தூரம் வைக்கும் முயற்சியாகவே இருந்தது. மேலும், அவரின் தாழ்வு மனப்பான்மையை நீர்த்துப்போக செய்யும் தன்னம்பிக்கை சார்ந்த முறைமை பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. மெல்ல தான் செய்தது தவறென அவர் நினைக்க ஆரம்பித்தார். எங்களுக்கு முன்னமே அவர்கள் இருவருமே ஒளிவு மறைவு இல்லாமல் தத்தெடுத்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு செய்தோம். அது அவர்கள் உறவை இலகுவாக்கிற்று.
இந்த சமூகம் வைத்திருக்கும் சில நியதிகளை தங்கள் வாழ்வு தராசில் பலர் நிறுத்துவதேயில்லை. குழந்தையில்லை என்பதை ஒரு குற்றமாக இந்த சமூகம் பார்க்கும் கண்ணோட்டமே ஒரு மனநோய் தான். குழந்தையைத் தத்தெடுக்கும் முன்னமே ஏன் தத்தெடுக்க நினைக்கிறோம் என்பது பற்றிய ஒருமனோதத்துவ ஆலோசனை அவசியம் தேவை. தன்னை சிறந்த தாயாக நினைக்க வைக்க சவீதாவின் தாய் முனைய, அந்தப் பாசத்தைக்கொண்டே உணர்வு ரீதியான சுரண்டலைக் கச்சிதமாக செய்திருக்கிறார் சவீதா.
குழந்தைகள் கையில் இணையதளத்தை பரவலாக கொடுப்பது மிகத் தவறான விஷயம். அதை பல பெற்றோர்கள் இன்று தங்களை அறியாமல் செய்து வருகிறார்கள். இளவயதில் மூளை மிக லேசாக ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டு விடும். சவீதாவின் அம்மா அறியாமல் பாசம் காட்டுவதாக நினைத்த விஷயம் சவீதாவின் வாழ்வையையே திசை மாற்றி விட்டது.
மனம் பற்றி படரும் உணர்வுக் கொடிதான். நவீன சிக்கல்களின் முழுசேதாரமும் இயந்திர உலகின் மூலமான மெய்நிகர் உறவினால்தான். அன்பும் பகிர்தலுமே மனதையும் மனித வாழ்வையும் உயிர்ப்பிக்க வைக்கிறது என்பதை புரிந்துகொண்டாலே விடுதலை நம் வசமே.


தகவல்: டாக்டர் சுனில்குமார் மற்றும் டாக்டர் ஜெயசுதா - மைண்ட் ஜோன் மருத்துவமனை
எழுத்தாக்கம்: தமயந்தி

Thursday 8 June 2017

MIND ZONE: psychiatric hospital in chennai

MIND ZONE: psychiatric hospital in chennai: Who can get Admission? ·          Person who has an issue with alcohol abuse or Drug use ·           Alcohol and Drug related viol...

MIND ZONE

MIND ZONE: psychiatric hospital in chennai

MIND ZONE: psychiatric hospital in chennai: Who can get Admission? ·          Person who has an issue with alcohol abuse or Drug use ·           Alcohol and Drug related viol...

MIND ZONE

MIND ZONE: psychiatric hospital in chennai

MIND ZONE: psychiatric hospital in chennai: Who can get Admission? ·          Person who has an issue with alcohol abuse or Drug use ·           Alcohol and Drug related viol...

MIND ZONE

Wednesday 19 April 2017

psychiatric hospital in chennai

‘’என்னப்பா… நேத்து ஆபீஸ் வரல?’’
‘’உடம்பு சரியில்ல சார்…’’
-இந்த உரையாடலைக் கேட்காத செவிகளே உலகத்தில் இல்லை.
உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை… அலுவலகத்தில் ஒரு நாள் லீவுக்காக சொல்லும் ஊழியரில் ஆரம்பித்து, நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கேட்கும் அரசியல்வாதி வரை அனைவரும் உபயோகப்படுத்துகிறோம்.
ஆனால் உடல்நிலையைப் போன்றே மனநிலை பாதிக்கப்பட்டோரும் நம்மில், நமக்கிடையில், நம்மைச் சுற்றி உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
2015- 16ஆம் ஆண்டில், நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மனநல ஆய்வுதரும் புள்ளிவிவரப்படி, 13.7 சதவிகிதம் பேர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 10.6 சதவிகிதம் பேருக்கு உடனடி மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என்பதுதான் அந்த ஆய்வு சொல்லும் அபாயகரமான புள்ளி விவரம்.
23 வயதான அந்த கல்லூரி மாணவன் பெயர் ஜேம்ஸ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்ற மாணவர்களைப் போலவே கல்லூரியின் வகுப்பறைகளைவிட சினிமா, ஹோட்டல் என்று வெளியே சுற்றுவதை அதிகம் விரும்பும் மாணவன்தான் ஜேம்ஸும். நண்பர்களுடன் வெளியே சுற்றுவதற்கு பணம் தேவைப்படுமே… பெற்றோர் தரும் பாக்கெட் மணி ஒரு நாளைக்கு சில மணி நேரங்களுக்கே போதாதநிலையில், பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ். அப்போதுதான், தனது சீனியர் மாணவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு பத்தாயிரம், இருபதாயிரம் என்று சம்பாதிப்பதை அறிந்தான். இயல்பிலேயே பைக் ரைடிங்கில் கில்லாடியான ஜேம்ஸ்… உடனடியாக தானும் பைக் ரேஸில் கலந்துகொள்ள ஆரம்பித்தான்.
அரக்கத்தனமாக உறுமும் சத்தத்தோடு பைக் ரேசில் கலந்துகொண்ட ஜேம்ஸ் பலமுறை விபத்துகளில் சிக்கியிருக்கிறான். பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதுபோல, ஜேம்ஸின் பைக் ரேஸ் அத்துமீறல்களால் விபத்துகள் ஏற்பட்டு அதில் பல உயிர்களும் பறிபோயின.
மெல்ல மெல்ல இந்த குற்றவுணர்ச்சி ஜேம்ஸை உறுத்தியது. பெற்றோருடன் அடிக்கடி சண்டையிட்டு வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பான். பிளேடை எடுத்து தன் கை, கழுத்துப் பகுதிகளில் கீறிக்கொள்வான். ஜேம்ஸின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு பெற்றோர் அதிர்ந்தனர். அடிக்கடி அவன் மேற்கொண்ட தற்கொலை முயற்சி அவர்களை நிலைகுலைய வைத்தது.
கோபத்தை அடக்கிக்கொள்வதிலும், ஆசையை தள்ளிப்போடுவதிலும், உறவுகளை நிலையாக வைத்துக்கொள்வதிலும் தோல்வி அடைந்திருந்தான். தங்கள் பிள்ளையின் எழுச்சிமிகு நடத்தையாலும், தீய நண்பர்களின் சேர்க்கையாலும், விளைவுகளை யோசிக்காமல் செயல்படும் அவனது வீரியத்தாலும் கவலையில் இருந்த பெற்றோருக்கு அந்தச் செய்தி கடுமையான வலியைக் கொடுத்தது.
ஆம்… மனரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜேம்ஸ்… மெல்ல மெல்ல போதைப் பழக்கத்துக்கும் ஆளாகிவிட்டிருந்தான். குறிப்பாக அவனது மது, கஞ்சா பழக்கம், அவனது அடிப்படை குணக் கோளாறுகளை மேலும் சிதிலப்படுத்தியது. எரியும் மனதை அணைக்க அவனுக்கு போதையே தேவையாகிவிட்டது.
மனநோயின் முழு வீச்சை இப்போது எட்டிவிட்டிருந்தான் ஜேம்ஸ்.
மனநோய் சில வேளைகளில் உயிரைக்கூட எளிதாக பறித்துப் போட்டுவிடும். மனச் சோர்வு குறைபாடுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லையென்றால், தற்கொலை வரை போக வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. மது உள்ளிட்ட போதை பழக்கங்கள் அதைக் கொண்டவர் உயிரைக் கொல்லும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம், போதையில் இருப்பவர்கள் முன்பின் யோசிக்காமல் ஈடுபடும் அத்துமீறல் நடத்தைகளால் (Impulsive Behavior) பல உயிர்கள் பலியாகும் அபாயம் நிறையவே இருக்கிறது.
ஜேம்ஸ் போன்றவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே உரிய மனநலப் பயிற்சிகள், சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை எனில்… சமுதாயத்தில் இருக்கிற அப்பாவிகளின் உயிரையும் பறித்து கடைசியில், தானும் உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒரு பரிதாப பயங்கரமாகவே அவர்களின் வாழ்க்கை முடியும்.
Mind Zone மனநல மருத்துவமனையில் எல்லாவிதமான மன நோய்கள், மது/போதை பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கும், நடத்தைக் கோளாறுகளிலிருந்து மீளவும் உலகத்தரம் வாய்ந்த உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
தரமான மனநல மருத்துவர்களால் பயிற்சிகள் மூலமாகவும், மருந்து மாத்திரைகள் மூலமாகவும் Mind Zone மனநல மருத்துவமனையில் உயரிய சிகிச்சை வழங்கப்படுகிறது.
இளையோருக்கு ஏற்படும் இத்தகைய மனநிலை கோளாறுகளுக்கும், மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் அவர்கள் முழுமையாக அப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு சராசரியான மனித வாழ்வை சஞ்சலமின்றி அனுபவிக்க முடியும்.
70 படுக்கைகள் கொண்ட Mind Zone மனநல மருத்துவமனை நாட்டில் மன பிரச்னைகளற்ற மனிதர்களை உருவாக்க தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.
எதை இழந்தாலும் மனதை இழந்துவிடாதீர்கள்…
DR. சுனில் குமார்,
மருத்துவ உளவியல் நிபுணர்,
நிறுவனர் MIND ZONE
DR. ஜெயசுதா காமராஜ்,
உளவியல் நிபுணர்,
துணை நிறுவனர்- MIND ZONE

Friday 14 April 2017

MIND ZONE: psychiatric hospital in chennai

MIND ZONE: psychiatric hospital in chennai: Who can get Admission? ·          Person who has an issue with alcohol abuse or Drug use ·           Alcohol and Drug related viol...

MIND ZONE

MIND ZONE: psychiatric hospital in chennai

MIND ZONE: psychiatric hospital in chennai: Who can get Admission? ·          Person who has an issue with alcohol abuse or Drug use ·           Alcohol and Drug related viol...

MIND ZONE

psychiatric hospital in chennai


Who can get Admission?

·         Person who has an issue with alcohol abuse or Drug use






























http://mindzone.in/